`அதிசய மனிதன், புரட்சிக்காரன்..’ - இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்!
'இவர்கள் வித்தியாசமானவர்கள்' (1980) என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக திரைத்துறையில் நுழைந்தவர் வேலு பிரபாகரன். தன் திறன்களை வளர்த்துக்கொண்டு நாளைய மனிதன், அதிசய மனிதன், அசுரன் , ராஜாளி, கடவுள், சிவன், புரட்சிக்காரன் போன்ற படங்களை இயக்கி இயக்குநர் உலகில் தனக்கான இடத்தை உறுதி செய்தார். இது தவிர, 'பதினாறு, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், கடாவர், பீட்சா 3, ரெய்டு, வெப்பன், கஜானா' போன்ற படங்களில் நடித்தார்.
2009-ல் 'காதல் கதை' என்ற படம் மூலம் மீண்டும் இயக்குநராகி, 2017ல் 'ஒரு இயக்குனரின் காதல் டைரி' படத்தையும் எடுத்தார். 68 வயதாகும் வேலுபிரபாகரன், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்கிடையில் நேற்று அவரது உடல்நிலை மிக மோசமடைந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு வேலு பிரபாகரனுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி வேலு பிரபாகரன் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.