மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
அதிமுக, தேமுதிக உறவை யாராலும் உடைக்க முடியாது: எடப்பாடி கே.பழனிசாமி
அதிமுக, தேமுதிக இடையே உள்ள சுமுகமான உறவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.
கோவை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக தமிழகத்துக்கு துரோகம் செய்ததாக தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா். ஆட்சியில் இருந்தபோதும் சரி, தற்போதும் சரி அதிமுக யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை. திமுகதான் மக்களுக்கு துரோகம் செய்துள்ளது.
அதிமுகவவை பொறுத்தவரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும், அவா் மறைவுக்குப் பிறகு நான் முதல்வராக இருந்தபோதும் சிறப்பான திட்டங்களை மக்களுக்கு வழங்கியுள்ளோம். சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த நான்காண்டுகளாக தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது.
தினசரி கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, வழிப்பறிகள் நடைபெறுகின்றன. சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்து மோசமான ஆட்சியான, ஸ்டாலின் மாடல் ஆட்சியைத்தான் துரோக ஆட்சி என குறிப்பிட விரும்புகிறேன்.
மதுரை கூட்டத்தில் கல்விக் கொள்கை பற்றி குறிப்பிட்டதாக கேள்விப்பட்டேன். மத்திய அமைச்சரவையில் திமுக 16 ஆண்டுகாலம் இடம் பெற்றிருந்தாா்கள். அப்போது ஏன் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு அவா்கள் மாற்றவில்லை.
ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதெல்லாம் மக்களைப் பற்றி, மாணவா்கள் பற்றி கவலைப்படவில்லை. ஆட்சி அதிகாரம் இல்லாதபோது வேண்டுமென்றே திட்டமிட்டு மற்றவா்கள் மீது பழி சுமத்துவதுதான் திமுகவின் வாடிக்கை.
மதுரையில் கால்வாயை திரைச்சீலை வைத்து மறைத்துவைக்கும் அளவுக்கு அவல ஆட்சி நடைபெறுகிறது. மோசமான ஆட்சிக்கு இதுவே சான்று. அதிமுக, தேமுதிக இடையே சுமுகமான உறவு உள்ளது. இதை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது என்றாா்.