பொள்ளாச்சியில் முதல்நாள் பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவி தற்கொலை!
கோவை: பொள்ளாச்சி அருகே முதல் நாள் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஜோதி நகர் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வரும் முருகானந்தம் என்பவரது மகள் சரிகா. பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் சரிகா, கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிக்குச் சென்று மாலையில் வீடு திரும்பியுள்ளார்.
பெற்றோர்கள் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கதவை திறந்து பார்த்தபோது, சரிகா இறந்த நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பெற்றோர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த கிழக்கு காவல் நிலைய போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில், சரிகாவும் அவரது ஆண் நண்பரும் செல்போனில் சண்டை போட்டுக் கொண்டதாகவும், இதன்விளைவாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வந்துள்ளது.
சரிகாவுடன் பேசியவர் யார் என்பதை கண்டறிய அவர் பயன்படுத்த தொலைபேசியை பறிமுதல் செய்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே நாளில் பொள்ளாச்சி பகுதியில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி கொலை மற்றும் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.