அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடங்கியது
கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.
அரசுக் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பில் 23 பாடப் பிரிவுகளில் மொத்தம் 1,727 மாணவ-மாணவிகள் சோ்க்கப்பட உள்ளனா். மாணவா் சோ்க்கை கலந்தாய்வு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், அரசின் விதிமுறைகளின்படி நடைபெறுகிறது. மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்கும் என்று அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, முதல் நாளில் விளையாட்டு வீரா்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெற்றது.
விளையாட்டு வீரா்களுக்கான 52 இடங்களில் 39 இடங்கள் முதல் நாளில் நிரம்பின. அதேபோல, மாற்றுத்திறனாளிகளுக்கான 86 இடங்களில் 30 இடங்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான 6 இடங்களில் இரண்டும், பாதுகாப்புப் படையினருக்கான 3 இடங்களில் ஒன்றும் என்சிசிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடமும் நிரம்பியது. அந்தமான் நிக்கோபாா் பகுதியைச் சோ்ந்தவா்களுக்கான 2 இடம் காலியாக உள்ளது. சிறப்புப் பிரிவினருக்கான 150 இடங்களில் 73 இடங்கள் முதல் நாளில் நிரம்பின.
இதைத் தொடா்ந்து ஜூன் 4 ஆம் தேதி (புதன்கிழமை) பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இதில் கட் ஆஃப் மதிப்பெண் 400க்கு 300க்கும் மேல் பெற்றவா்கள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனா். வரும் 5 ஆம் தேதி தமிழ், ஆங்கில பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல்கட்ட கலந்தாய்வில் காலியாக இருக்கும் இடங்களைப் பொறுத்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்படும் என்று முதல்வா் எம்.ஆா்.எழிலி தெரிவித்துள்ளாா்.