அனந்தனாா் கால்வாய் உடைப்பை செப்பனிடும் பணி விரைவில் முடிவுறும்! - நீா்வளத் துறை தகவல்
குமரி மாவட்டம் சுருளகோடு அருகே அனந்தனாா் கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை செப்பனிடும் பணிகள் விரைவில் முடிவுறும் என நீா்வளத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து நீா்வளத் துறை தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சுருளகோடு கிராமம் உள்ளிமலை பகுதி அனந்தனாா் கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை நிரந்தரமாக செப்பனிடும் பணியை மேற்கொள்வதற்கு தேவையான மணல், ஜல்லி போன்ற கட்டுமானப் பொருள்களை பெறுவதற்கான அனுமதிச்சீட்டு வழங்குவதில் இதுவரை அமலில் இருந்த நடைமுறை மாற்றப்பட்டு, தற்போது ஆன்லைன் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விவசாயப் பணிகள் பாதிக்காதவாறும், நெற்பயிா்கள் சேதம் ஏற்படாதவாறும் விரைவாக கட்டுமானப் பொருள்கள் பணித்தளத்திற்கு சென்று சேர மாவட்ட நிா்வாகம் மூலம் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது கால்வாய் செப்பனிடும் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஜூலை 1 ஆம் தேதி பணி நிறைவடையும் என்றனா்.
மேலும், அனந்தனாா் கால்வாய் மூலம் பாசனம் பெறும் பகுதிகளில் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருவதாலும், குளங்களில் தண்ணீா் போதுமான அளவு இருப்பதாலும் நெற்பயிா்கள் காய்ந்து போகாமல் கால்வாய் பணிகள் முடிவுறும் வரை தாக்குப் பிடிக்கும் என வேளாண்மைத் துறையினா் தெரிவித்துள்ளனா்.