அப்பாவுவுக்கு எதிரான அதிமுக தீர்மானம் தோல்வி!
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவுக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்தது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களை அதிக நேரம் பேச அனுமதிப்பதில்லை, தொலைக்காட்சியில் நீண்ட நேரம் தங்களது பேச்சை நேரலை செய்தில்லை என்ற குற்றச்சாட்டுகளை வைத்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் உதயக்குமார் இன்று கொண்டுவந்தார்.
இந்த தீர்மானம் விவாதத்துக்கு வந்த நிலையில், பேரவையைவிட்டு அப்பாவு வெளியேறினார். துணைத் தலைவர் பிச்சாண்டி அவைக்கு தலைமையேற்று வழிநடத்தினார்.
இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதையும் படிக்க : நடுநிலையோடு செயல்படுபவர் பேரவைத் தலைவர் அப்பாவு: முதல்வர் ஸ்டாலின்
காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜக, பாமக உறுப்பினர்கள் பேரவைக் கூட்டத்தில் இன்று கலந்துகொள்ளவில்லை.
விவாதத்தின் இறுதியில் பேசிய முதல்வர், ”என் தலையீடோ, அமைச்சர்களின் தலையீடோ இல்லாமல் நடுநிலையோடு பேரவை வழிநடத்தி வருபவர் அப்பாவு” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் தீர்மானம் தோல்வியடைந்தது. தொடர்ந்து, எதிர்க்கட்சியின் கோரிக்கையை ஏற்று டிவிஷன் முறையிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதிலும், தீர்மானம் தோல்வி அடைந்ததாக பேரவைத் துணைத் தலைவர் பிச்சாண்டி அறிவித்தார்.
இதனிடையே, அதிமுக கொண்டு வந்த தீர்மானத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் ஆதரவு தெரிவித்து வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.