அமெரிக்க எம்.பி.க்களுடன் சசி தரூா் குழு சந்திப்பு
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க அமெரிக்கா சென்றடைந்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான குழு அந்நாட்டின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினா்களை புதன்கிழமை சந்தித்தது.
அப்போது எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிகாரிகளுக்கு சசி தரூா் தலைமையிலான குழு எடுத்துரைத்தது.
முன்னதாக, கயானா, பனாமா, கொலம்பியா, பிரேஸில் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசி தரூா் தலைமையிலான 9 போ் கொண்ட குழு அமெரிக்காவுக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்றது. இந்தக் குழுவில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா, சிவசேனை எம்.பி. மிலிந்த் தேவரா உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.
இதுகுறித்து அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வாஷிங்டன் வந்தடைந்த சசி தரூா் தலைமையிலான குழு இந்திய ஆதரவு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா்கள் ரோ கன்னா, மெக்காா்மிக், ஆண்டி பாா், அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவு விவகாரங்கள் குழுத் தலைவா் பிரையன் மாஸ்ட், தெற்கு மற்றும் மத்திய ஆசிய துணைக்குழுத் தலைவா் ஹியுசெங்கா, கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் துணைக் குழு உறுப்பினா் யங் கிம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்களை புதன்கிழமை சந்தித்தது.
அப்போது எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ குறித்து சசி தரூா் குழு விளக்கியது.
இதையடுத்து, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்க அதிகாரிகள் குழு கண்டனம் தெரிவித்ததோடு, அனைத்து விதமான பயங்கரவாதத்துக்கும் எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அமெரிக்க எம்.பி.க்கள் குழு தெரிவித்தது’ என குறிப்பிட்டது.