அமெரிக்காவின் அலுவல் மொழியாக ஆங்கிலம்: டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக ஆங்கிலம் இருக்குமென அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை அறிவிக்கும் புதிய உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று கையெழுத்திட்டுள்ளார்.
இந்த உத்தரவின் மூலம் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் நிர்வாகச் சேவைகளை மேம்படுத்தும் விதமாக குறைந்த ஆங்கிலப் புலமை உள்ளவர்களுக்காக கொண்டுவந்த ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது.
டிரம்ப் வெளியிட்ட அந்த உத்தரவில், “நமது குடியரசு நிறுவப்பட்டது முதல் ஆங்கிலம் நமது தேசிய மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நமது தேசத்தின் சுதந்திர பிரகடனம், அரசியலமைப்பு உள்ளிட்ட முக்கிய வரலாற்று அரசியல் ஆவணங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவையே.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... ஊருக்குள் இன்னும் எத்தனை ஞானசேகரன்கள்?
எனவே, ஆங்கிலம் அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாகி நீண்ட காலமாகிவிட்டது. தேசிய அளவில் அறிவிக்கப்பட்ட ஒரு மொழி ஒருங்கிணைந்த மற்றும் ஒருமித்த சமுதாயத்தின் மையமாகக் கருதப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் ஒரே மொழி பயன்படுத்தப்படுவது சுதந்திரமான கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் குடிமக்களால் மேலும் வலுவடையும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ”நமது தேசிய மொழியைக் கற்கவும், ஏற்றுக் கொள்ளவும் புதிய அமெரிக்கர்களை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்காவை தனது கனவாகக் கொண்டுள்ளவர்களுக்கான அதிகாரத்தை இது வழங்கும்.
ஆங்கிலம் பேசுவது பொருளாதார வளர்ச்சிக்கானக் கதவுகளைத் திறப்பது மட்டுமின்றி புதியவர்கள் நமது சமூகத்தில் இணையவும் தேசிய மரபுகளில் பங்குகொள்ளவும் உதவுகிறது. ஆங்கிலம் பேசும் பன்மொழி கற்று தங்கள் குழந்தைகள் உள்ளிட்ட அடுத்த தலைமுறைக்கு அதனைக் கடத்தும் அமெரிக்க குடிமக்களை இந்த உத்தரவு அங்கீகரித்து கொண்டாடுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.