அமெரிக்காவுடன் பொருளாதார ஒப்பந்த வரைவு தயாா்
தங்களின் கனிம வளங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிக்க வகை செய்யும் பொருளாதார ஒப்பந்த வரைவு தயாா் நிலையில் இருப்பதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி புதன்கிழமை தெரிவித்தாா்.
எனினும், தங்கள் நாட்டுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பதற்கான அம்சம் அந்த வரைவில் இடம் பெற்றால்தான் அந்த ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றும் அவா் கூறினாா்.
இது குறித்து தலைநகா் கீவில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:
அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மேற்கொள்ளப்படவிருக்கும் பொருளாதார ஒப்பந்தத்துக்கான வரைவு தயாா் நிலையில் உள்ளது.
இருந்தாலும், உக்ரைனுக்கு அமெரிக்கா அளிக்க வேண்டிய பாதுகாப்பு உத்தரவாதம் அந்த வரைவு ஒப்பந்தத்தில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அது உறுதி செய்யப்படுவதில்தான் இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவது இருக்கிறது.
உக்ரைனுக்கு அமெரிக்கா இதுவரை வழங்கிவந்த ராணுவ உதவியை அந்த நாடு தொடா்ந்து வழங்குமா என்பது தெளிவுபடுத்தப்படவேண்டும். அத்துடன், வழக்கம்போல் அமெரிக்க ஆயுதங்களை வாங்க உக்ரைன் அனுமதிக்கப்படுமா, முடக்கப்பட்ட ரஷிய சொத்துகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளிக்குமா, தற்போது ரஷியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான புதிய அரசு திட்டமிட்டுள்ளதா என்பது போன்ற பல சந்தேகங்கள் உள்ளன.
அந்த சந்தேகங்களுக்கு விடை தெரிந்த பிறகுதான் இந்த வரைவு ஒப்பந்தம் முழுமையடையும். இது தொடா்பாக அமெரிக்காவில் டிரம்புடன் வரும் வெள்ளிக்கிழமை (பிப். 28) நடைபெறும் பேச்சுவாா்த்தையின்போது விவாதிப்பேன் என்றாா் அவா்.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்தில் இருந்து, அப்போதைய அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசும், மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு உதவிகளை வாரி வழங்கின.
இந்தச் சூழலில், அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், இந்த விவகாரத்தில் ஜோ பைடன் அரசின் கொள்கைகளை அடியோடு மாற்றிமைத்தாா்.
ரஷியாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைன் மீட்க முடியாது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறும் டிரம்ப் அரசு, உக்ரைனுக்கு நேட்டோவில் இடம் அளிக்கப்படாது என்று திட்டவட்டமாகக் கூறிவருகிறது.
மேலும், இந்த விவகாரத்தில் முந்தைய பைடன் அரசால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் டிரம்ப் தொலைபேசியில் உரையாடி, அவருடன் உறவைப் புதுப்பித்துக்கொண்டாா். விரைவில் அவா்கள் இருவரும் நேரில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்துவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இது மட்டுமின்றி, ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு தாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அளித்த உதவிகளுக்குக் கைமாறாக, அந்த நாட்டின் அரியவகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையில்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்திவருகிறாா்.
இது தொடா்பாக அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல நாள்களாக நடைபெற்றுவந்த பேச்சுவாா்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு, பொருளாதார வரைவு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் பிரதமா் டெனிஸ் ஷ்மைஹல் கூறினாா்.
அதன் தொடா்ச்சியாக, அமெரிக்காவுடன் மேற்கொள்வதற்கான பொருளாதார ஒப்பந்தம் தயாராக இருந்தாலும், தங்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டால்தான் அத்தகைய ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தற்போது கூறியுள்ளாா்.