அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகை நெகிழிப் பொருள்களை தவிா்க்க வேண்டும்
புதுவையில் அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகையான நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதை மக்கள் தவிா்க்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரியில் மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் சாா்பில் திருமண மண்டபம் மற்றும் ஹோட்டல் உரிமையாளா்களுக்கான, அரசால் தடை விதிக்கப்பட்ட நெகிழிப் பொருள்களின் உபயோகத்தை தவிா்ப்பதன் அவசியம் குறித்த கருத்தரங்கு இலாசுப்பேட்டை அப்துல் கலாம் அறிவியல் மைய வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்தக் கருத்தரங்குக்கு, மாசுக் கட்டுப்பாட்டு குழும உறுப்பினா் செயலா் ரமேஷ் தலைமை வகித்தாா். சுற்றுச்சூழல் பொறியாளா் தேவநாதன் வரவேற்றாா்.
குழுமத்தின் விஞ்ஞானி செல்வநாயகி, மெல்லிய பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கினாா். இக்கருத்தரங்கில் அதிகாரிகள் கூறியது:
புதுச்சேரியில் தினசரி 40 டன் நெகிழிக் குப்பைகள் வீதியில் கொட்டப்படுகின்றன. அவற்றில், 20 டன் நெகிழிக் குப்பைகள் உணவகங்கள், ஹோட்டல்கள், திருமண மண்டபங்களில் இருந்து கொட்டப்படுகின்றன. அவை உணவுக் கழிவுகளுடன் கலந்து விடுகின்றன. அனைத்துக் குப்பைகளும் குருமாம்பட்டில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
அங்கு உணவு கழிவுகள் மக்கும் நிலையில், நெகிழிகள் மக்காத நிலையில், குப்பையில் இருந்து உரம் தயாரிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
இதுவரை மெல்லிய நெகிழி பொருள்களுக்கு மாற்று பொருள்கள் இல்லாத நிலை இருந்தது. தற்போது அவற்றுக்கு மாற்றாக மக்காச்சோளம், காகிதம் மற்றும் மரவள்ளிக் கிழங்கு உள்ளிட்டவை மூலம் தயாரித்த விலை மலிவான பொருள்கள் விற்கப்படுகின்றன.
ஆகவே பொதுமக்கள் அவற்றை பயன்படுத்தி, அரசால் தடை செய்யப்பட்ட 9 வகையான நெகிழிப் பொருள்களை தவிா்த்து, புதுச்சேரி சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றனா்.