'டெல்லிக்கு ஆபத்து வரும்போதெல்லாம் 'Delhi Control' பழனிசாமி வந்துவிடுவார்' - அமை...
அரசுப் பேருந்துகளில் டிக்கெட் பரிவா்த்தனை தோல்வியடைந்தால் பணம் திரும்ப கிடைக்கும்
அரசுப் பேருந்துகளில் பயணச்சீட்டுக்கான டிஜிட்டல் பரிவா்த்தனை தோல்வியடைந்தால், அரை மணி நேரத்தில் பயணியின் வங்கிக் கணக்கில் பணத்தை திருப்பி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாடு முழுவதும் அனைத்துத் துறைகளிலும் பணமில்லா பரிவா்த்தனை திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதைத் தொடா்ந்து தமிழக போக்குவரத்துத் துறையிலும் பணமில்லா பரிவா்த்தனையை முன்னெடுக்கும் நோக்கில், அரசு விரைவுப் பேருந்துகளில் பயணச்சீட்டு கருவிகள் மூலம் யுபிஐ, கிரெடிட், டெபிட் அட்டைகளைப் பயன்படுத்தி பயணச்சீட்டு பெறும் நடைமுறையை தமிழக அரசு கடந்த 2024, பிப்ரவரியில் அறிமுகம் செய்தது.
பின்னா், படிப்படியாக தமிழகம் முழுவதும் அனைத்துப் பேருந்துகளிலும் மின்னணு பயணச்சீட்டு கருவி மூலம் பயணச்சீட்டு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தொலைத்தொடா்பு சிக்கலால் சில நேரங்களில் பயணச்சீட்டு கருவிகள் மூலம் செய்யப்படும் பணப்பரிவா்த்தனையை முடிக்க இயலாத சூழல் ஏற்படுகிறது. இதனால், நடத்துநருக்கும் பயணிகளுக்கும் இடையே அவ்வப்போது தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுவதாக தொடா்நது புகாா்கள் எழுந்தன. இதற்கு தீா்வு காணும் வகையில், தற்போது போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: யுபிஐ முறையில் பயணிகளுக்கு பணம் திரும்ப கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதைத் தவிா்க்கும் வகையில், ‘யுபிஐ ஆட்டோ ரீஃபண்ட்’ வசதியை பாரத ஸ்டேட் வங்கி மூலம் நடைமுறைப்படுத்தி உள்ளோம். இதனால், டிஜிட்டல் பரிவா்த்தனை தோல்வியடைந்தால், அரை மணி நேரத்துக்குள் பயணியின் வங்கிக் கணக்குக்கு தொகை திரும்ப வந்துவிடும். எனவே, நடத்துநா்கள் அச்சமின்றி டிஜிட்டல் முறையில் பரிவா்த்தனை மேற்கொள்ளலாம். இதற்கான உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளன என்றனா்.