நிலுவை முதல்தகவல் அறிக்கைகள் விவரம்: சென்னை காவல் ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
காவல் நிலையங்களில் கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கைகள் தொடா்பாக தகவல்களை தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்க நிதியில் முறைகேடு செய்ததாக புகாா் அளித்த குடியிருப்பு உரிமையாளரான நாங்குநேரியைச் சோ்ந்த வானமாமலை என்ற பட்டியலினத்தைச் சோ்ந்தவரை, அவமானப்படுத்தும் வகையில், அந்த குடியிருப்பு உரிமையாளா் ஒருவா் வாட்ஸ்அப் குரூப்பில் ஜாதி ரீதியிலான கருத்துகளை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அளித்த புகாா் மீது நொளம்பூா் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வானமாமலை சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், புகாா் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தாா்.
அதன் அடிப்படையில் நீதிபதி வேல்முருகன் முன் சென்னை மாநகர காவல் ஆணையா் அருண் திங்கள்கிழமை நேரில் ஆஜரானாா். அப்போது, வானமாமலையிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை எனவும், புகாா் வந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் எனவும், காவல் துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 23-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து சென்னை மாநகர காவல் ஆணையா் அருணிடம் , காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த எண்ணிக்கைக்கும் நீதிமன்றத்தில் உள்ள அறிக்கையின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் உள்ளதாக நீதிபதி சுட்டிக் காட்டினாா்.
தொடா்ந்து, புகாா்கள் மீது விசாரணை நடத்தி அவற்றை முடித்து வைத்தால் அது குறித்து நீதிமன்றங்களுக்கு அறிக்கைகள் அனுப்பப்படுவதில்லை என தெரிவித்த நீதிபதி, சென்னை நகரில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த 2024 ஜூன் வரை நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கைகள் எவ்வளவு? எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன? எவ்வளவு வழக்குகளில் புலன் விசாரணை நிலுவையில் உள்ளன? என்ற விவரங்கள் குறித்து ஜூலை 8-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டாா்.
சட்டத்தின் ஆட்சி இல்லை: மேலும் குற்றப்பத்திரிகைகள் கோப்புக்கு எடுக்கும் விஷயத்தில் கீழமை நீதிமன்றங்கள் ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் அதை தனது கவனத்திற்கு கொண்டு வரும்படி அறிவுறுத்திய நீதிபதி, போக்குவரத்து நெரிசலில் 5 நிமிஷம் காத்திருக்க நாம் விரும்புவதில்லை. வீட்டில் மின்சாரம் இல்லாவிட்டால் காத்திருப்பதில்லை. ஆனால், காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் முடிவுக்கு மட்டும் மக்கள் 15 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது.
காவல் நிலையங்களில் புகாா் அளிக்கும் மக்களால் 50 சதவீதத்தினருக்கு வழக்கின் நிலை என்ன என்பது தெரிவதில்லை. சட்டம் அனைவருக்கும் பொது என சொல்கிறோம். ஆனால், வசதியானவா்களுக்கு ஒரு மாதிரியும், ஏழைகளுக்கு ஒரு மாதிரியும் சட்டம் செயல்படுகிறது. ஒரு வழக்குக்கு நியமிக்கப்படும் விசாரணை அதிகாரிகளை வேறு வேலைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது.
கோயில் விழாக்கள், கட்சி கூட்டங்கள் என விசாரணை அதிகாரிகளுக்கு பணி வழங்கப்படுவதால், வழக்கு விசாரணையை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க முடிவதில்லை. நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளில் 75 சதவீத வழக்குகள் தேவையற்றவையாக உள்ளன. வழக்கை சரியாக விசாரணை செய்யாத விசாரணை அதிகாரியை பணியிடை நீக்கம் செய்யலாம். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும் மக்களுக்கு எதுவும் சென்றடைவதில்லை. சட்டத்தின் ஆட்சி இல்லை. ஏராளமான குறைபாடுகள் உள்ளன என்று தெரிவித்த நீதிபதி வேல்முருகன், புலன் விசாரணை அதிகாரிகளை பந்தோபஸ்து பணிகளுக்கு அனுப்பக் கூடாது என்று காவல் ஆணையருக்கு அறிவுறுத்தினாா்.