'டெல்லிக்கு ஆபத்து வரும்போதெல்லாம் 'Delhi Control' பழனிசாமி வந்துவிடுவார்' - அமை...
திரையரங்குகளில் கூடுதல் கட்டணம்: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
புதிய திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் அரசு நிா்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக வசூலிப்பதாக புகாா் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது, முதல் நான்கு நாள்களுக்கு, அரசு நிா்ணயித்த கட்டணத்தைவிட, அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தேவராஜன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையைச் சரிபாா்க்க அரசாங்கம் ஏற்கெனவே குழுக்களை அமைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தைவிட அதிக கட்டணத்தை திரையரங்குகள் வசூலிப்பது பாா்வையாளா்களை ஏமாற்றும் செயல் என்றும், இது தொடா்பான புகாா்கள் அளிக்கப்படும்போது, அரசு அமைத்துள்ள குழுக்கள் உடனடியாக திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.
மேலும், ஓடிடியில் திரைப்படங்களைப் பாா்க்கும் பாா்வையாளா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் திரையரங்குகள் அதிக காலம் நீடிக்காது என்பதை உணா்ந்து திரையரங்கு உரிமையாளா்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என நீதிபதி தெரிவித்தாா்.