அதிவேக அரைசதம் விளாசி ஏபி டி வில்லியர்ஸ் சாதனையை சமன்செய்த மே.இ.தீவுகள் வீரர்!
அறிக்கை வெளியிட ரவி மோகன் - ஆர்த்திக்கு உயர் நீதிமன்றம் தடை!
தங்களுக்கு இடையிலான பிரச்னை பற்றி அறிக்கை வெளியிட நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியைவிட்டு பிரிவதாகத் தெரிவித்து விவாகரத்து கோரியுள்ளார். சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில், ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா இருவரும் திருமண நிகழ்வில் ஒன்றாகக் கலந்துகொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், மனமுடைந்த ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு நானும் என் குழந்தைகளும் பாதிப்படைந்துள்ளோம் எனக் குறிப்பிட்டு ரவி மோகனின் நடவடிக்கைகள் குறித்து கடுமையாகச் சாடியிருந்தார். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
இதனால் எழுந்த விமர்சனங்களுக்கு ரவி மோகன் 4 பக்கம் கொண்ட அறிக்கையை வெளியிட்டார். அதில், “ என் முன்னாள் மனைவியும் அவரின் குடும்பத்தாரும் என்னைக் கொடுமைப்படுத்தியுள்ளனர். என் சுதந்திரத்தைப் பறித்து பொருளாதார ரீதியாகக் கஷ்டப்படுத்தினர்” என தன் தரப்பு நியாயங்களைக் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆர்த்தி ரவி 5 பக்க அறிக்கையை வெளியிட்டார். அதில், “எனக்குக் ‘கட்டுபடுத்திய மனைவி' என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. என் கணவரை அன்புடன் பராமரித்து, அவருக்குக் கேடு தரும் தீய பழக்கவழக்கங்களிலிருந்தும் எங்கள் வீட்டின் உறுதியை சீர்குலைக்கும் விஷயங்களிலிருந்தும் அவரைப் பாதுகாத்துக் கட்டுப்படுத்தியது என் குற்றம் என்றால், அப்படியே இருக்கட்டும். எந்த ஒரு உண்மையான மனைவியும் தன் கணவரின் நலனுக்காக எதைச் செய்வாரோ நானும் அதைத்தான் செய்தேன்.” என்று தெரிவித்திருந்தார்.
அண்மைக்காலமாக இருவரும் மாறிமாறி அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை வெளியிட ஆர்த்தி ரவி மற்றும் அவரது தாய்க்கு தடை விதிக்கக்கோரி நடிகர் ரவி மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், தங்களுக்கு இடையிலான பிரச்னை பற்றி பொது வெளியில் அவதூறு கருத்துகளை வெளியிட நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்திக்கு தடை விதித்தனர்.
மேலும், இவர்கள் குறித்த செய்திகளை வெளியிடவும், விவாதிக்கவும் சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: காந்தாரா சேப்டர் - 1 வெளியீடு எப்போது? படக்குழு விளக்கம்