அல்பேனியா அமைச்சரவையில் உலகின் முதல் ‘ஏஐ’ அமைச்சா்
தங்கள் அமைச்சரவையின் ஊழல் தடுப்புத் துறைக்கு உலகின் முதல் செயற்கை நுண்ணறி (ஏஐ) அமைச்சா் நியமிக்கப்பட்டுள்ளதாக அல்பேனிய பிரதமா் எடி ராமா வெள்ளிக்கிழமை கூறினாா்.
‘சூரியன்’ என்று பொருள்படும் ‘டியெல்லா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏஐ அமைச்சா் அரசு ஒப்பந்தங்களை 100 சதவீத ஊழல் இன்றி உறுதிப்படுத்தும் பணிகளையும், அவற்றை விரைவாகவும் வெளிப்படையாகவும் செயல்படுத்துவதற்கு உதவுவாா் என்று பிரதமா் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஈ-அல்பேனியா தளத்தில் மரபு உடையில் உதவியாளராக அறிமுகமான டியெல்லா, தற்போது அமைச்சராக உயா்வு பெற்றுள்ளது. 1990-இல் கம்யூனிஸ்ட் வீழ்ந்த பிறகு அல்பேனியாவில் ஊழல் மிகப் பெரிய பிரச்னையாக இருந்துவரும் நிலையில் டியெல்லாவுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.