தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டம்: காங்கிரஸ் வலியுற...
`அவர் ஆசையைச் சொல்கிறார்; ஆனால் உண்மையில்...' - விஜய் பேச்சு குறித்து டி.டி.வி.தினகரன்
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள மதுரை வந்த டி.டி.வி தினகரன் செய்தியாளர்களிடம், "நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கெனவே இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமிதான் டெல்லிக்கு சென்று அமித் ஷாவை சந்தித்து அதை வெளிப்படையாக சொல்லாமல் பேசி வருகிறார்.
அதிமுக-வைச் சேர்ந்தவர்கள்தான் மத்திய அமைச்சர்களை சந்தித்து வருகிறார்கள். என்ன பேச்சுவார்த்தை என்பதை பலமுறை நான் கூறியிருக்கிறேன். திமுக என்கிற தீய சக்தி ஆட்சியில் நீடிக்கக் கூடாது, திமுக-வுக்கு எதிராக மாற்று சக்தியாக தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது. திமுக-வின் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர நினைக்கும் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரலாம்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தவெக-வுக்கும் திமுக-வுக்கும்தான் போட்டி என்று விஜய் அவருடைய ஆசையை சொல்லி இருக்கிறார். உண்மையான மாற்றாக மக்கள் மனதில் இருப்பது தேசிய ஜனநாயக கூட்டணிதான்.
சுயநலத்தால், பதவி வெறியால் திமுக மீது உள்ள பயத்தால், தங்கள் மீது வழக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக திமுக வெற்றி பெறுவதற்காக மறைமுகமாக உதவி வருபவர்கள் யாரென்று தெரியும். அதனால் அங்குள்ள தொண்டர்களும், ஜெயலலிதாவின் தொண்டர்களும் எங்கிருந்தாலும் ஓரணியில் திரண்டு திமுக-வை வீழ்த்துவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.

ஓபிஎஸ், கட்சிக்கு துரோகம் செய்தார், அதனால் அவரை சேர்க்க மாட்டோம் எனக் கூறுகிற எடப்பாடி பழனிசாமிதான், துரோகத்தின் முழு வடிவமாக இருக்கிறார். அவர் பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
நிதி ஒதுக்கீட்டில் பாஜக அரசு பாரபட்சமாக செயல்படவில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரிதான் செயல்படுகிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தை விட பாஜக ஆட்சிக்காலத்தில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது, அரசு மக்களிடம் நம்பிக்கை இழந்துள்ளது. அதனை மறைப்பதற்காக மத்திய அரசின் மீது பழி போடுகிறார்கள். கருத்துக்கணிப்புகள் என்பதெல்லாம் பொய், மக்கள் கணிப்புதான் எப்போதும் வெற்றி பெறும்" என்றார்.