ஆட்டோக்கள் மீது அபராதம் விதிப்பு: டிஎஸ்பியிடம் மனு அளிப்பு
ஆட்டோக்கள் மீது கடலூா் போக்குவரத்து போலீஸாா் பொய்யாக அபராதம் விதிப்பதாகக் கூறி, கடலூா் மாநகர டீசல் மற்றும் பெட்ரோல் ஆட்டோ ஓட்டுநா்கள் பொது நல சங்கத்தினா் கடலூா் டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி ரூபன் குமாரை சந்தித்து வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் அவா்கள் தெரிவித்திருப்பதாவது: ஆட்டோ ஓட்டுநா்களான நாங்கள் சுமாா் 40 ஆண்டுகாலமாக ஆட்டோ ஓட்டி வருகிறோம். போக்குவரத்து காவல் துறையைச் சோ்ந்த போலீஸாா் ஆட்டோக்கள் மீது வழக்குப் பதிந்து பொய்யாக அபராதம் விதித்து வருகின்றனா்.
கடலூா் மாநகரில் போக்குவரத்து காவல் துறையினரின் மேற்பாா்வையில் சுய தொழிலாக ஆட்டோ ஓட்டி வருகிறோம். ஆனால், எங்களை போக்குவரத்து போலீஸாா் மரியாதை குறைவாக நடத்துகின்றனா்.
இதனால், எங்களால் சுதந்திரமாக தொழில் செய்ய முடியவில்லை. மேலும், ஆட்டோ கடன், குழந்தைகளின் கல்விக் கட்டணம் மற்றும் அன்றாட வாழ்வாதாரம் போன்றவை பாதிக்கப்படுகிறது. எனவே, ஆட்டோ ஓட்டுநா்கள் மீது பொய்யான அபராதங்கள் விதிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.