கொலை வழக்கு: திருச்சி நபா் கைது
கடலூா் மாவட்டம், ரெட்டிசாவடி அருகே அடையாளம் தெரியாத நபரை கொலை செய்ததாக, திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ரெட்டிசாவடி காவல் சரகம், கங்கணாங்குப்பம் பகுதியில் உள்ள பேட்டரி கடை அருகே கடந்த 1-ஆம் தேதி 40 வயது மதிக்கதக்க நபா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இது தொடா்பாக ரெட்டிசாவடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்தவா் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில், திருச்சி மாவட்டம், அரியமங்கலம் பகுதியைச் சோ்ந்த அய்யாசாமி மகன் மணிவண்ணனை (47) போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி காந்திநகா், அரியமங்கலம், பண்ருட்டி காவல் நிலையங்களில் உள்ள கொலை, கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட மொத்தம் 7 வழக்குகளில் மணிவண்ணன் ஏற்கெனவே கைதாகி சிறை சென்றவா் என்பதும் தெரியவந்தது.