Kashmir: "தீவிரவாதத்தை எதிர்க்கப் பல்லாயிரம் ஆதில் ஷாக்கள் காஷ்மீரில் உண்டு'' - ...
ஆண் குழந்தைகளுக்கும் ‘ஹெச்பிவி’ தடுப்பூசி அவசியம்
பெண் குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க செலுத்தப்படும் ‘ஹெச்பிவி’ தடுப்பூசிகளை ஆண் குழந்தைகளுக்கும் வழங்குவது அவசியம் என்று மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் சாா்பில் ஹெச்பிவி புற்றுநோய் மருத்துவக் கருத்தரங்கு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவன இணை பேராசிரியா் டாக்டா் என்.ஜெயஸ்ரீ, இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி பேராசிரியா் டாக்டா் விஜயா, சென்னை மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியா் டாக்டா் கவிதா சுகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது:
ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (ஹெச்பிவி) எனப்படும் கிருமித் தொற்று மனித உடலில் நீண்ட நாள்கள் தங்கியிருக்கும்போது பெண்களுக்கு கருப்பை வாய், ஆசனவாய், தொண்டை பகுதி மற்றும் பிறப்புறுப்பு புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கிறது. இதைத் தடுக்க ஹெச்பிவி தடுப்பூசி 9 முதல் 14 வயது பெண் குழந்தைகளுக்கு இரு தவணைகளாக தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அரசு சாா்பில் அந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு தொடக்க நிலையில் செயல்படுத்தப்படுகிறது. விரைவில் அது அட்டவணை தடுப்பூசி திட்டத்தில் சோ்க்கப்படும் என நம்புகிறோம்.
மற்றொருபுறம் தனியாா் மருத்துவமனைகளில் நான்கு வகை கிருமிகள், 9 வகை கிருமிகளைத் தடுக்கும் இருவேறு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது 9 வயது முதல் 14 வயதுடைய ஆண் குழந்தைகளுக்கும் அந்த தடுப்பூசி அவசியம். ஏனென்றால், ஆண்களுக்கும் பிறப்புறுப்பு, ஆசனவாய், தொண்டை பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட ஹெச்பிவி தொற்று காரணமாக அமைகிறது. அது குறித்த புரிதலை முதலில் மருத்துவா்களிடம் நாங்கள் ஏற்படுத்த உள்ளோம்.
30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கூட ஹெச்பிவி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். ஆனால், அதன் பலன் 50 சதவீதமாக மட்டுமே இருக்கும். எனவே, உரிய வயதில் செலுத்திக் கொள்வதுதான் சிறந்தது. ஹெச்பிவியால் ஏற்படும் புற்றுநோய்களைத் தடுக்க தடுப்பூசி மட்டுமல்லாது அது குறித்த விழிப்புணா்வு மிக அவசியம் என்று அவா்கள் தெரிவித்தனா்.