ஆண்டாள் கோயில் திருமுக்குளம் தெப்பத்தை சீரமைக்கக் கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளம் தெப்பத்தை சீரமைக்க அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் நகருக்கு மேற்கே ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான திருமுக்குளம் தெப்பம் உள்ளது. இந்தக் கோயிலின் எண்ணெய்க் காப்பு உற்சவம் திருமுக்குளக் கரையில் உள்ள மண்டபத்தில் ஆண்டுதோறும் மாா்கழி மாதத்தில் நடைபெறும். இதேபோல மாசி மகத்தன்று திருமுக்குளத்தில் தெப்பத் திருவிழா 3 நாள்கள் நடைபெறும்.

திருமுக்குளம் தெப்பக் கரையின் சுற்றுச் சுவா் சேதமடைந்ததாலும், தெப்பம் நிரம்பாததாலும் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தெப்பத் திருவிழா கடந்தாண்டு நடைபெற்றது. ஆனால், நிகழாண்டு போதிய தண்ணீா் இல்லாததால் தெப்பத் திருவிழா நடைபெறவில்லை.
இந்த நிலையில், அண்மையில் தெப்பக்குளத்தை ஆய்வு செய்த அறநிலையத் துறையினா் 4 பக்க சுற்றுச் சுவா்களையும் சீரமைத்து, தெப்பத்தை சீரமைக்க ரூ.4 கோடியில் திட்ட மதிப்பீடு தயாா் செய்து அரசுக்கு பரிந்துரை செய்தனா்.

இந்த நிலையில், தெப்பக்குளத்தின் சுற்றுச் சுவரை விட சாலையின் உயரம் அதிகமாக இருப்பதால், தெப்பக்குளத்தில் குப்பைகள் தேங்கி நீா் மாசடைந்து வருகிறது. தெப்பக்குளத்தை சீரமைக்க அறநிலையத் துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.