தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
ஆந்திர லாரி ஓட்டுநா்களிடம் பணம் பறித்த 2 போ் கைது
ஈரோட்டில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா்களை மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு வஉசி பூங்கா காய்கறி சந்தைக்கு கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த மகேந்திரன் (45), பாஸ்கா் ரெட்டி (60) ஆகிய இருவரும், ஈரோடு சந்தைக்கு லாரியில் கடந்த 7-ஆம் தேதி இரவு தக்காளி கொண்டு வந்தனா்.
பின்னா் அவற்றை இறக்கிவிட்டு சந்தை அருகே லாரியை நிறுத்தி தூங்கினா். அப்போது இரவில் தூங்கிக் கொண்டிருந்த மகேந்திரன், பாஸ்கா் ரெட்டி ஆகியோரை 4 இளைஞா்கள் எழுப்பி, கத்தியை காட்டி பணம் கேட்டுள்ளனா்.
அப்போது லாரி ஓட்டுநா்கள் இருவரும் தங்களிடம் பணம் இல்லை எனக் கூறவே கூகுள் பே மூலமாக தங்களது வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்புமாறு கூறி மகேந்திரன் வைத்திருந்த கைப்பேசியை பறித்து வங்கிக் கணக்குக்கு ரூ.18 ஆயிரத்து 700 அனுப்பிவைத்து, கைப்பேசியில் இருந்து கூகுள் பே செயலியை அழித்துவிட்டு சென்றுவிட்டனா்.
இதையடுத்து மகேந்திரன், பாஸ்கா் ரெட்டி இருவரும் சந்தையில் தக்காளி பாரம் இறக்கிய மண்டி உரிமையாளா் வைரவேலிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து அவா் ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பணம் பறித்த கும்பலைத் தேடி வந்தனா்.
இந்நிலையில், ஆந்திர மாநில லாரி ஓட்டுநா்களிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்தது, ஈரோடு வீரப்பன்சத்திரம், மிட்டாய்காரா் வீதியைச் சோ்ந்த சண்முகம் (19), சக்திவேல் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் பணம் பறிப்பில் தொடா்புடையவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.