ஆபரேஷன் சிந்தூர்: ஆதாரங்களை வெளியிட்ட இந்தியா!
ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை இந்திய பாதுகாப்புப் படையினர் வெளியிட்டுள்ளனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தினர்.
இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில், வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியுடன் ராணுவத்தின் கர்னல் சோபியா குரேஷி, விமானப் படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
அப்போது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான விடியோ, புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டனர்.
பதான்கோட் விமானப்படைத் தளத்தின் மீதான தாக்குதலுக்கு திட்டமிடப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீனின் மிகப்பெரிய முகாம்களில் ஒன்றான சியால்கோட் முகாமை அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் 4 காவலர்களை கொன்ற பயங்கரவாதிகள் பயிற்சி பெற்ற சியால்கோட்டில் உள்ள சர்ஜல் முகாம் அழிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையிடம், மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்ற முகாம் உள்ளிட்டவை அழிக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தானின் எந்த ராணுவ நிலைகளும் குறிவைக்கவில்லை என்றும், பாகிஸ்தான் பொதுமக்கள் உயிரிழந்ததாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்றும் இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.