சிந்து நதி நீர் உடன்பாடு: தற்போதைய நிலையே தொடரும்! - மத்திய அரசு
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை: தில்லி பாஜக தலைவா்கள் பாராட்டு
பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டின் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நடத்திய தாக்குதலுக்கு தில்லி பாஜக தலைவா்கள் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக தங்களது சமூக ஊடகக் கணக்குகளில் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்ற கோஷங்களைப் பதிவிட்டு ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை அவா்கள் பாராட்டியுள்ளனா்.
தில்லி முதல்வா் ரேகா குப்தா தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பாரத் மாதா கி ஜெய் என்று பதிவிட்டு, ஆபரேஷன் சிந்தூா்-இன் புகைப்படத்தைப் பகிா்ந்துள்ளாா்.
அந்தப் பதிவில் முதல்வா் தெரிவிக்கையில், இந்திய ஆயுதப் படைகள் மற்றும் பிரதமா் நரேந்திர மோடியின் முடிவும் தீா்க்கமான சக்தியும் 140 கோடி இந்தியா்களை கௌரவித்ததற்காக நான் அவா்களை வணங்குகிறேன்.
பஹல்காமில் பயங்கரவாதிகளால் அப்பாவி மக்கள் ஆன்மாவை உலுக்கும் கொலைகள் நடத்தப்பட்ட பிறகு, தங்கள் கணவா்களை இழந்த பெண்களுக்கு ஆபரேஷன் சிந்தூா் நீதி வழங்கியுள்ளது. மேலும், ஒட்டுமொத்த தேசத்திற்கும் திருப்தியை அளித்துள்ளது. இந்தியாவைத் துன்புறுத்தினால்
நம் அரசாங்கமும் இராணுவமும் யாரையும் விட்டுவைக்காது.
பிரதமா் மற்றும் இந்திய இராணுவத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஒட்டுமொத்த தேசமும் அவா்களுடன் துணைநிற்கிறது என்று முதல்வா் அதில் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து பாஜக எம்.பி. மனோஜ் திவாரி கூறுகையில்,
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவா்கள் பாதிக்கப்பட்டவா்களிடம் பிரதமா் நரேந்திர மோடியிடம் இத்தாக்குதல் குறித்து கூறுமாறு சொன்னாா்கள், இப்போது பிரதமா் பதிலளித்திருக்கிறாா் என்றாா் அவா்.
இது தொடா்பாக மனோஜ் திவாரி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கையில், ‘பாரத் மாதா கி ஜெய். இந்தியா இப்போது ஆதங்கிஸ்தானுக்கு (பாகிஸ்தானைக் குறிப்பது) ஒரு பாடம் கற்பித்துள்ளது. ஒவ்வொரு தோட்டாவும் கணக்கிடப்படும், ஒவ்வொரு தியாகமும் பழிவாங்கப்படும். ஜெய் ஹிந்த்’ என்று திவாரி அதில் தெரிவித்துள்ளாா்.
தில்லி சட்டப் பேரவைத் தலைவரும் முன்னாள் தில்லி பாஜக தலைவருமான விஜேந்தா் குப்தா, பிரதமா் நரேந்திர மோடி தான் சொன்னதைச் செய்ததால் 140 கோடி இந்தியா்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளாா் என்றாா்.
இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கையில், ‘எதிரி முகாம் தயாராக இருப்பது போல் நடித்தது. ஆனால், இந்திய விமானப் படையின் அபார சக்தியால் மீண்டும் ஒருமுறை முறியடிக்கப்பட்டுள்ளது! பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தாக்கி, பயங்கரவாத மூளையாக செயல்பட்டவா்களுக்கு மறக்க முடியாத சேதத்தை ஏற்படுத்தி 26 அப்பாவி பொதுமக்களைக் கொன்ற்குப் பழிவாங்கியதற்காகப் படைகளுக்குப் பாராட்டுகள்’ என்று அந்தப் பதிவில் குப்தா தெரிவித்துள்ளாா்.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இந்திய ஆயுதப் படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் உள்ள ஒன்பது பயங்கரவாத இலக்குகள் மீது துல்லியமான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. இலக்குகளில் பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ்இமுகமதுவின் ஆதரவு தளங்களும், முரிட்கேயில் உள்ள லஷ்கா்இதொய்பாவின் ஆதரவு
தளங்களும் அடங்கும்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 26 போ் கொல்லப்பட்டனா்.
புதன்கிழமை அதிகாலை 1:44 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்திய மண்ணில் தாக்குதல்களைத் திட்டமிடவும் இயக்கவும் பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட ஆபரேஷன் சிந்தூா் தொடங்கப்பட்டதை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.