இணைப்புச் சாலையை சீரமைக்கக் கோரிக்கை
திருவாரூா்: திருவாரூா் அருகே சேதமடைந்துள்ள மேட்டுப்பாளையம் இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் நகராட்சி 29-ஆவது வாா்டுக்குள்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில், நாகை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இணைப்புச் சாலை பிரிகிறது. இந்த சாலை வழியாகச் சென்றால், சுந்தரவிளாகம், தப்பளாம்புலியூா், ஆந்தகுடி, நாகலூா் உள்ளிட்ட கிராமப் பகுதிகளுக்குச் செல்ல முடியும்.
இந்த இணைப்புச் சாலையானது, மிகவும் பழுதடைந்திருப்பதால் தாா்ச்சாலை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு இளைஞா் கட்சியின் மாவட்டச் செயலாளா் என். தியாகசுந்தரம் தெரிவித்தது:
நாகை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரியும் மேட்டுப்பாளையம் சாலை, நீண்ட காலமாக பழுதடைந்து மோசமான நிலையில், பயன்படுத்த முடியாதபடி உள்ளது. இந்த சாலை வழியாக, தினசரி 2 அரசுப் பேருந்துகள் இயங்கி வருகின்றன. கிராமப் பகுதிகளுக்குச் செல்ல இந்த வழியே மிக முக்கியமானது என்பதால், இந்த வழியைப் பயன்படுத்தும் கிராமப்புற மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனா்.
சாலைகளில் ஏராளமான பள்ளங்கள் உள்ளதால், இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்வோா் விபத்துகளை சந்திக்க வேண்டியுள்ளது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளி பேருந்துகளும், சைக்கிளிலும் மாணவ- மாணவிகள் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனா். அனைத்து தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம் இணைப்புச் சாலையை சீரமைத்து, தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என்றாா்.