நெல்லை: குடியிருப்பு பகுதிக்குள் மீண்டும் உலா.. வீடு புகுந்து எண்ணெய் குடித்துச்...
``இந்த மோதல்கள் குறித்து மற்றவர்களைவிட ட்ரம்ப் அதிகம் கவலைப்படுகிறார்" - ஜேடி வான்ஸ் பேட்டி
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அமெரிக்கா கைகோர்த்து, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரானின் மூன்று அணு ஆயுத தளங்களை அமெரிக்கா குறிவைத்து தாக்கியிருப்பதாகவும், இதை அமெரிக்காவை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இனி அமைதிக்கான நேரம் எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காவின் பல அரசியல் தலைவர்களும், பல்வேறு அமைப்புகளும், ஐநா உள்ளிட்ட, உலகின் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில், NBC-ன் "Meet the Press" என்ற நிகழ்ச்சியில் அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, ``ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் முடிவு தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் எடுக்கப்பட்டது. இறுதி நிமிடம் வரை இந்தத் தாக்குதலை நிறுத்தும் திறன் இருந்தது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் அமெரிக்க இராணுவ தளங்களை தாக்குகிறதா... அதன் அணு ஆயுதத் திட்டத்தைத் தொடர்கிறதா என்பதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். இதுவரை அமெரிக்கா ஈரானியர்களிடமிருந்து சில மறைமுக செய்திகளைப் பெற்றுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்க ஈரான் நடவடிக்கை எடுத்தால் அது அவர்களின் தற்கொலைக்கு சமம். அந்த முடிவு அவர்களின் சொந்த பொருளாதாரத்தை அழித்துவிடும்.
ஈரானில் எங்களின் ஆளுமையை நிரூபிக்க வேண்டும் என்ற எந்த ஆர்வமும் இல்லை. அதனால் இந்தப் போரில் அமெரிக்காவின் ஈடுபாடு அதிகரிக்கும் என்ற கவலைகள் தேவையற்றது.

இந்த மோதல்கள் குறித்து மற்ற அனைவரையும் விட அதிபர் ட்ரம்ப் மிகவும் கவலைப்படுகிறார். அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் இலக்காக ஈரானிய அணுசக்தி திட்டத்தை ஒழிப்பதற்காக வைக்கப்பட்ட இலக்குக்காக நாங்கள் செயல்படுகிறோம். எனவே, அந்த இலக்குதான் வரும் வாரங்கள் எங்கள் நடவடிக்கையை முடிவு செய்யும்" என்றார்.