``இந்தத் தொழில விட்டா வேற எதுவும் தெரியாது; நிரந்தர வருமானம் கிடையாது" - கலங்கும் மூங்கில் தம்பதி
சென்னை கொரட்டூர் ரயில் நிலையம்... சீயாத்தம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் ஒரு மூங்கில் பொருட்கள் கடை...
இதுவரை மூங்கில் பொருட்கள் கடைகளில் மூங்கில் கூடை, மூங்கில் பெட்டி, மூங்கில் முறம் பார்த்தவர்களுக்கு இந்த கடையைப் பார்க்கும்போது கொஞ்சம் அதிர்ச்சியாகவும், நிறைய ஆச்சரியமாகவும் இருக்கும்.
'அப்படி என்ன இருக்கு?' என்று கேட்கிறீர்களா...அந்த மூங்கில் கடையில் இருக்கும் போன், பேனா ஹோல்டர், மொபைல் போன் ஹோல்டர், மினியேச்சர் மாட்டு வண்டிகள் என வித விதமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் பொருட்கள் நம்மை அசத்துகின்றன.
ஆர்வம் உந்தித்தள்ள அந்தக் கடைக்கு ஒரு விசிட் அடித்தோம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-03/9eqdlw6s/IMG_20250130_140355.jpg)
'என் பேரு ஜெயலட்சுமி. என்னோட கணவர் பேரு வெங்கடேசன். நாங்க ரெண்டு பேரும் இங்க பத்து வருஷமா கடை போட்டுருக்கோம். இந்தத் தொழிலை முன்னாடி எங்க அம்மா, அப்பா பண்ணிட்டு இருந்தாங்க. இப்போ நாங்க பண்றோம். நாங்க மட்டும் இந்தத் தொழிலுக்கு வந்து அம்பது வருசம் ஆகுது.
இதுல வந்த வருமானத்தை வெச்சு தான் எங்க புள்ளைகளை படிக்க வெச்சோம். இப்போ அவங்க நல்ல வேலைகள்ல இருக்காங்க. அவங்களுக்கு இந்தத் தொழில் தெரியாது...எங்களுக்கு இந்தத் தொழிலை விட்டா வேற எதுவுமே தெரியாது" என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஜெயலட்சுமியின் கைகளில் மூங்கில் பின்னல்கள் அங்கும் இங்கும் போய் ஒரு சூப்பரான கூடை உருவாகி இருந்தது.
'எங்ககிட்ட அரிசி வடிக்குற கூடை, காய்கறி வைக்கிற ட்ரே, இடியாப்பத் தட்டு, சின்ன சின்ன விளையாட்டு பொருட்கள், போன், பேனா ஹோல்டர் என நிறைய பொருட்கள் எங்ககிட்ட இருக்கு. இது அத்தனையும் மூங்கில்ல செஞ்சது.
இந்த மூங்கிலை என் வீட்டுக்காரர் ஆவடிக்கு போய் பாத்து பாத்து வாங்கிட்டு வருவாரு. ஒரு மூங்கிலோட விலை ரூ.150-ல இருந்து 300 வரைக்கும் இருக்கும். நானும், என்னோட வீட்டுக்காரரும் எங்களுக்குள்ளயே வேலைகளைப் பிரிச்சு செய்வோம். அவரு பொருட்களை செய்றதுக்கு ஏத்த மாதிரி பக்குவமா சீச்சி கொடுப்பாரு. அடுத்ததா நான் பின்னுவேன். இப்படி தான் இங்க இருக்க ஒவ்வொரு பொருளையும் நாங்க செஞ்சுருக்கோம்" என்று கூறும் ஜெயலட்சுமியை தொடர்கிறார் அவரது கணவர்...
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-03/i4mpbcru/IMG_20250130_140414.jpg)
"ஒவ்வொரு பொருளுக்கேத்த மாதிரி 40 ரூபாய்ல இருந்து 400 ரூபாய் வரைக்கும் விப்போம். இந்தப் பொருட்களை வெளியில வெச்சு விக்க முடிய மாட்டேங்குது. அதனால, இந்தக் கடைய வாடகைக்கு எடுத்து விக்கறோம். ஒரு நாளைக்கு இவ்வளவு வியாபாரம் ஆகும்னு நிரந்தர வருமானம் எல்லாம் எங்களுக்கு கிடையாது. ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு மாதிரி வியாபாரம் ஆகும். அதுக்கேத்த மாதிரி வருமானமும் வரும். நல்லா வியாபாரம் ஆனா, வீட்டு வாடகை, கடை வாடகை போக கையில 15,000 ரூபா மிஞ்சும். அத வெச்சு தான் மூங்கில் வாங்கறது மாதிரியான மத்த செலவுகளை எல்லாம் செஞ்சுப்போம்.
மக்கள் வந்ததும் பொருட்களை நம்ம சொல்ற விலைக்கு அப்படியே வாங்கிட மாட்டாங்க. பேரம் பேசுவாங்க. அதுக்கேத்த மாதிரி தான் எங்களுக்கு வருமானம் வரும். சில நேரம் பல்க் ஆர்டர் வரும்போது கையில காசு புழங்கும். ஆனா, அந்தப் பல்க் ஆர்டர் எப்பவுமே வராது.
அதே மாதிரி ஒரு மாசம் பொருட்கள் நல்ல விற்பனை ஆகும்...இன்னொரு மாசம் அவ்வளவா விற்பனை ஆகாது. ஆனா, என்ன பண்றது சமாளிச்சு தானே ஆகணும். சமாளிச்சுட்டு இருக்கோம்" என்று வெள்ளந்தியாகச் சிரிக்கிறார் வெங்கடேசன்.