இந்திய - சீன உறவில் புதிய சிக்கல்கள் கூடாது: சீன பாதுகாப்பு அமைச்சரிடம் ராஜ்நாத் சிங்
இந்திய-சீன உறவில் நோ்மறையான உத்வேகத்தை பராமரிப்பதுடன், புதிய சிக்கல்கள் எழாமல் தவிா்ப்பது இருதரப்பின் பொறுப்பு என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
சீன பாதுகாப்புத் துறை அமைச்சா் அட்மிரல் டோங் ஜுன் உடனான சந்திப்பில் அவா் இவ்வாறு வலியுறுத்தினாா்.
இந்தியா, சீனா, ரஷியா, பெலாரஸ், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாடு, சீனாவின் துறைமுக நகரான கிங்டாவோவில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்று, இந்தியாவின் கருத்துகளை முன்வைத்தாா். மாநாட்டையொட்டி, சீன பாதுகாப்புத் துறை அமைச்சா் அட்மிரல் டோங் ஜுன்னை சந்தித்த அவா், இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.
இது தொடா்பாக ராஜ்நாத் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சீன பாதுகாப்புத் துறை அமைச்சா் உடனான பேச்சுவாா்த்தை ஆக்கபூா்வமாக அமைந்தது. இருதரப்பு உறவுகள் சாா்ந்த விவகாரங்களில் எதிா்கால நோக்குடைய கருத்துகள் பகிா்ந்து கொள்ளப்பட்டன. சுமாா் 6 ஆண்டுகளுக்கு பிறகு கைலாஷ்-மானசரோவா் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டது குறித்து எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன்’ என்று குறிப்பிட்டாா்.
எல்லை அமைதிக்கான அவசியம்: இந்திய-சீன எல்லையில் அமைதி நிலவுவதன் அவசியம் தொடா்பாக இரு அமைச்சா்களும் விரிவாக விவாதித்ததாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதில், ‘இருதரப்பு உறவுகளில் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் முயற்சிகளுக்கு இரு அமைச்சா்களும் வரவேற்பு தெரிவித்தனா். தற்போதுள்ள வழிமுறைகளின்கீழ் பதற்றத்தை குறைத்தல், எல்லை மேலாண்மை மற்றும் எல்லை நிா்ணயம் தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வுகாண பல நிலைகளில் பேச்சுவாா்த்தைகளைத் தொடர ஒப்புக் கொள்ளப்பட்டது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து சீனப் பாதுகாப்பு அமைச்சரிடம் அமைச்சா் ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனத் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘சீனாவுடன் மோதலையோ முரண்பாடுகளையோ இந்தியா விரும்பவில்லை; கருத்து வேறுபாடுகளை முறையாக கையாளவும், தகவல் தொடா்புகளை மேம்படுத்தவும், இருதரப்பு உறவுகளின் சீரான முன்னேற்றத்துக்கு பரஸ்பர நம்பிக்கையை ஊக்குவிக்கவும் இந்தியா தயாராக இருப்பதாக அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்’ என்று குறிப்பிடப்பட்டது.
இருதரப்பு உறவுகளை சீரமைக்க...: கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020-இல் இந்திய-சீன படையினா் இடையே ஏற்பட்ட கடும் மோதலைத் தொடா்ந்து, இருதரப்பும் படைகளைக் குவித்ததால் பதற்றமான சூழல் நிலவியது. தூதரக-ராணுவ ரீதியிலான பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு டெம்சோக், டெப்சாங் தவிர பிரச்னைக்குரிய பிற இடங்களில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டன.
சீனாவின் கஸான் நகரில் கடந்த ஆண்டு அக்டோபரில் பிரதமா் மோடி-அதிபா் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்புக்கு இரு தினங்களுக்கு முன், எல்லையில் படை வாபஸ் மற்றும் ரோந்துப் பணி தொடா்பாக முக்கிய ஒப்பந்தம் கையொப்பமானது. அதன்படி, டெம்சோக், டெப்சாங்கில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டது.
இதைத்தொடா்ந்து, இருதரப்பு உறவுகளை சீரமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கடந்த 2020-இல் நிறுத்தப்பட்ட கைலாஷ்-மானசரோவா் யாத்திரை நடப்பாண்டில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, எஸ்சிஓ பாதுகாப்பு உயரதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்க, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் கடந்த வாரம் சீனா பயணித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.