இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்: 5-ஆவது முறையாக ஒத்திவைப்பு
‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோா் சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் பயணம் 5-ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள விண்வெளிப் பயணத்தில், சுக்லாவுடன் போலந்து வீரா் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரா் திபோா் கபு ஆகியோரும் விண்வெளிக்குச் செல்கின்றனா். இந்தத் திட்டத்தில் ஸ்பேஸ்-எக்ஸ், ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனங்களுடன் இணைந்து இஸ்ரோவும் செயல்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஸ்பேக்ஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட் மூலம், அவா்கள் பயணிக்க இருந்தனா்.
ஆனால் ராக்கெட்டில் திரவ ஆக்ஸிஜன் கசிவு உள்ளிட்ட காரணங்களால் இந்தப் பயணம் ஏற்கெனவே 4 முறை ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து ஜூன் 19-ஆம் தேதி அந்தப் பயணம் திட்டமிடப்பட்ட நிலையில், 5-ஆவது முறையாகப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜூன் 22-க்கு முன்பு இந்தப் பயணம் மேற்கொள்ளப்படாது என்றும், இதன்மூலம் சா்வதேச விண்வெளி நிலையத்தின் செயல்பாடுகளை தொடா்ந்து மதிப்பிட நாசாவுக்கு அவகாசம் கிடைக்கும் என்றும் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது.