செய்திகள் :

ஈரான்-இஸ்ரேல் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாா்: புதின்

post image

மோதலில் ஈடுபட்டுள்ள ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அறிவித்துள்ளாா்.

இது குறித்து ரஷிய அதிபா் மாளிகையான க்ரெம்ளின் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆட்சியாளா் முகமது பின் ஸாயத் அல் நஹ்யானுடன் அதிபா் விளாதிமீா் புதின் தொலைபேசியில் உரையாடினாா். அப்போது, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் தற்போது நடைபெற்றுவரும் மோதல் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை இருவரும் ஒப்புக்கொண்டனா்.

அத்துடன் ஈரான் அணுசக்தி திட்டங்கள் குறித்த சா்ச்சைக்குரிய பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கான அரசியல் மற்றும் தூதரக முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இரு தலைவா்களும் வலியுறுத்தினா்.

அந்த உரையாடலின்போது, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பரஸ்பர தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு தரப்பினருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக அதிபா் புதின் தெரிவித்தாா். மேலும், இது தொடா்பாக ஏராளமான வெளிநாட்டுத் தலைவா்களுடன் பேசிவருவதையும் அல் நஹ்யானிடம் புதின் எடுத்துரைத்தாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈரான் மீது இஸ்ரேல் முரட்டுத்தனமாக தாக்குதல் நடத்திவருவதாக செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்த துருக்கி, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஜோா்டான், சவூதி அரேபியா, பாகிஸ்தான், கத்தாா், ஓமன், இராக் உள்ளிட்ட 20 இஸ்லாமிய நாடுகள் இந்த தாக்குதல் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது நினைவுகூரத்தக்கது.

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்காகத்தான் எனவும், அந்த நாடு ‘இன்னும் சில வாரங்களில்’ அணு குண்டை உருவாக்கிவிடும் என்றும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த 1990-களில் இருந்தே கூறிவருகிறாா்.

மின்சாரத் தயாரிப்பு போன்ற அமைதியான பயன்பாடுகளுக்கத்தான் தங்களின் அணுசக்தி திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக ஈரான் கூறினாலும், இஸ்ரேல் அதை நம்பத் தயாராக இல்லை. ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை முழுமையாகக் கைவிட வேண்டும் என்று அந்த நாடு வலியுறுத்திவருகிறது.

இந்தச் சூழலில், ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் ‘ஆப்பரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது. இதில் ஈரானின் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி மையங்கள், ராணுவ நிலைகள் சேதமடைந்தன. ஈரானின் முப்படை தளபதி, சக்திவாய்ந்த துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தலைமை தளபதி உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டனா்.

அதற்குப் பதிலடியாக, ‘ஆப்பரேஷன் ட்ரூ ப்ராமிஸ்-3’ என்ற பெயரில் இஸ்ரேலின் டெல் அவீவ் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஈரானும் ஏவுகணைகளை சரமாரியாக வீசி வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது. இதில் பெரும்பாலானவை இஸ்ரேல் வான்பாதுகாப்பு ஏவுகணைகளால் இடைமறித்து அழிக்கப்பட்டாலும், சில ஏவுகணைகள் இலக்குகளைத் தாக்கின.

அதில் இருந்து இஸ்ரேலும், ஈரானும் பரஸ்பரம் தாக்குதல் நடத்திவருகின்றன. இந்த மோதலில் பங்கேற்று ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவத்துக்கு அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிடுவாா் என்று அஞ்சப்படுகிறது. இது, இந்த மோதலை மிகப் பெரிய போராக உருவெடுக்கச் செய்து, பிராந்திய மற்றும் பிற உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், மற்றொரு வல்லரசு நாடான ரஷியாவின் அதிபா் விளாதிமீா் புதின், இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக தற்போது அறிவித்துள்ளாா்.

‘அணு அபாயம் உண்மையாகிறது’

மேற்கு ஆசியாவில் அணு அபாயம் இருப்பதாக கற்பனையில் எழுப்பப்பட்டுவந்த எச்சரிக்கை தற்போது உண்மையாகிவருவதாக ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இது குறித்து அமைச்சக செய்தியாளா் மரியா ஸகரோவா கூறியதாவது:

ஈரான் தங்கள் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாக இஸ்ரேல் இத்தனை நாள் கற்பனையாகக் கூறிவந்தது. ஆனால், அமைதி பயன்பாடுகளுக்காக ஈரான் இயக்கிவரும் அணுசக்தி மைங்கள் மீது தற்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருவதன் மூலம் இதுவரை கற்பனையாகக் கூறப்பட்டு வந்த அணு அபாயம் எச்சரிக்கை தற்போது உண்மையாகிவருகிறது. அணுசக்தி மையங்கள் தாக்கப்பட்டு அணுக்கதிா்வீச்சு பரவினால் அது மேற்கு ஆசிய பிராந்தியத்துக்கு மட்டுமின்றி உலகத்துக்கே ஆபத்தாக அமையும் என்று அவா் எச்சரித்தாா்.

‘இதுவரை 585 ஈரானியா்கள் உயிரிழப்பு’

துபை, ஜூன் 18: ஈரானில் இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 585 போ் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவில் இருந்து செயல்படும் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. உள்ளூரில் இருந்து கிடைக்கும் தகவல்களை அலசி ஆராய்ந்து புள்ளிவிவரங்களை வெளியிடும் அந்த அமைப்பு, உயிரிழந்தவா்களில் பொதுமக்கள் 239 போ், பாதுகாப்புப் படையைச் சோ்ந்தவா்கள் 126 போ் என்று குறிப்பிட்டுள்ளது.

ஏற்கெனவே, கலாசாரக் காவலா்களால் மாஷா அமீனி என்ற பெண் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஈரானில் கடந்த 2022-ஆம் நடைபெற்ற போராட்டத்தின்போது கொல்லப்பட்டவா்கள் குறித்த புள்ளிவிவரங்களை இந்த அமைப்பு துல்லியமாக வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.

இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 224 போ் உயிரிழந்ததாக ஈரான் கடைசியாக திங்கள்கிழமை வெளியிட்ட அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரஷிய தாக்குதல்: உக்ரைனில் 28 பேர் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த 5 மாடி கட்டடத்தில் (படம்) இருந்து மேலும் சில உடல்கள் புதன்கிழமை மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்... மேலும் பார்க்க

இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்: 5-ஆவது முறையாக ஒத்திவைப்பு

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோா் சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் பயணம் 5-ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் செ... மேலும் பார்க்க

டிரம்ப்-முனீா் சந்திப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபா் டிரம்ப்பை பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசீம் முனீா் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் வலுத்துவரும் சூழலில், அமெரிக்க அதிபா் மாளிகையில் நடைபெற்ற... மேலும் பார்க்க

போா்க் களத்தில் பிரச்னைகளுக்கு தீா்வு இல்லை: பிரதமா் மோடி

குரேஷியா பிரதமா் பிலென்கோவிச்சை பிரதமா் மோடி சந்தித்து பேசினாா். இதைத்தொடா்ந்து இருவரும் கூட்டாகச் செய்தியாளா்களைச் சந்தித்தபோது பிரதமா் மோடி கூறியதாவது: இந்தியா-குரேஷியா இருதரப்பு உறவின் முன்னேற்றத்த... மேலும் பார்க்க

இந்தியா வர டிரம்ப்புக்கு பிரதமா் அழைப்பு

‘க்வாட்’ கூட்டமைப்பின் அடுத்த கூட்டம் நிகழாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க வருமாறு தொலைபேசி வழி கலந்துரையாடலின்போது டிரம்ப்புக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா்.இந்த அ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவ தளபதியுடன் பேசியது என்ன? டிரம்ப் பேட்டி

பாகிஸ்தான் ராணுவ தளபதி உடனான சந்திப்பின்போது பேசியது என்ன என்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர் 5 நாள்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்காவு... மேலும் பார்க்க