கவுன்சிலரிடையே மோதல்; மேசையை தூக்கிவீசி அமளிதுமளி- களேபரமான சிவகாசி மாமன்ற கூட்ட...
இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட 88 கிலோ தங்கம் பறிமுதல்!
குஜராத்தில் உள்ள குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் 88 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அகமதாபாத்தின் பல்தி பகுதியி்ல் உள்ள குடியிருப்பில் பங்குத் தரகரான மகேந்திர ஷாவின் மகன் மேக் ஷா என்பவரது வீட்டில் நேற்று இரவு பயங்கரவாதத் தடுப்புப் படை (ஏடிஎஸ்), வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ), குஜராத் போலீஸார் இணைந்து சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் அவரது வீட்டில் 88 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தன் மொத்த மதிப்பு ரூ. 80 கோடி என்றும் சொல்லப்படுகிறது. இதனை மதிப்பிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இதையும் படிக்க | நாக்பூர் வன்முறை முன்பே திட்டமிடப்பட்டது: தேவேந்திர ஃபட்னவீஸ்
இந்த மாதத்தின் தொடக்கத்தில் பெங்களூரு விமான நிலையத்தில் கன்னட நடிகை ரன்யா ராவ் அதிகளவு கடத்தல் தங்கத்துடன் பிடிபட்டதைத் தொடர்ந்த குஜராத் ஏடிஎஸ், டிஆர்ஐ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளின் தீவிர கண்காணிப்பின் கீழ் இந்த பெரிய பறிமுதல் நடைபெற்றுள்ளது.
"அகமதாபாத்தில் உள்ள ஒரு உயரமான குடியிருப்பு கட்டிடத்தில் கடத்தல் தங்கம் அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக டிஎஸ்பி-க்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. திங்களன்று காலை நாங்கள் அந்த குடியிருப்பை அடையாளம் கண்டு, உள்ளூர் டிஆர்ஐ பிரிவைச் சேர்ந்த ஒரு குழுவுடன் சோதனை நடத்தினோம்," என்று குஜராத் ஏடிஎஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தங்கக் கட்டுகள் மட்டுமின்றி, வைரங்கள் மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகங்கள் பொருத்தப்பட்ட 19.66 கிலோ எடையுள்ள நகைகளையும் அதிகாரிகள் மீட்டதாக இன்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக, ரூ.1.37 கோடி ரொக்கமும் மீட்கப்பட்டது.
இதுதொடர்பாக, மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.