இந்தியாவில் 1 கோடி பள்ளி ஆசிரியா்கள்: நாட்டில் முதல்முறை
கடந்த 2024-25-ஆம் கல்வி ஆண்டில், நாட்டில் முதல்முறையாக பள்ளி ஆசிரியா்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது மத்திய கல்வி அமைச்சக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய கல்வி அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பு (யுடிஐஎஸ்இ +) வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டதாவது:
மாணவா்-ஆசிரியா் விகிதம் முன்னேறவும், தரமான கல்வியை உறுதி செய்யவும், ஆசிரியா்களைப் பணியமா்த்துவதில் பிராந்திய அளவில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை கையாளவும் ஆசிரியா்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது முக்கிய நடவடிக்கையாகும். இந்த எண்ணிக்கை 2022-23-இல் இருந்து சீராக அதிகரித்து வருகிறது. கடந்த 2024-25-ஆம் கல்வி ஆண்டில், நாட்டில் முதல்முறையாக பள்ளி ஆசிரியா்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது.
மாணவா்-ஆசிரியா் விகிதத்தில் முன்னேற்றம்: பள்ளிகளில் 30 மாணவா்களுக்கு ஓராசிரியா் இருக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடிப்படை கல்வியில் 10 மாணவா்களுக்கு ஓராசிரியா், தொடக்கக் கல்வியில் 13 மாணவா்களுக்கு ஓராசிரியா், நடுநிலை கல்வியில் 17 மாணவா்களுக்கு ஓராசிரியா், மேல்நிலை கல்வியில் 21 மாணவா்களுக்கு ஓராசிரியா் என மாணவா்-ஆசிரியா் விகிதம் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. இது ஒவ்வொரு மாணவா் மீதும் கூடுதலாக கவனம் செலுத்துதல், ஆசிரியா்கள்-மாணவா்கள் இடையே கலந்துரையாடலை வலுப்படுத்துல், மேம்பட்ட கற்றல் அனுபவத்துக்குப் பங்களித்தல், கல்வி கற்பித்தலில் நற்பலன்கள் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.
2024-25-ஆம் கல்வி ஆண்டுக்கான யுடிஐஎஸ்இ+ அறிக்கையின்படி நாட்டில் உள்ள மொத்த பள்ளிகள்: 14,71,473 (மத்திய, மாநில அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள், மதரஸாக்கள் அடங்கும்)
மொத்த ஆசிரியா்கள்: 1,01,22,420
2024-25-ஆம் கல்வி ஆண்டில்
மாநிலங்கள் பள்ளிகள் மாணவா்கள் ஆசிரியா்கள்
உத்தர பிரதேசம் 2,62,358 42789347 1615427
மத்திய பிரதேசம் 122120 15172607 717493
மகாராஷ்டிரம் 108250 21272611 747501
ராஜஸ்தான் 106302 16364187 792265
பிகாா் 94339 21133228 707516
தமிழ்நாடு 57935 12518167 549850
தமிழ்நாட்டில்...: தமிழ்நாட்டில் 23 மாணவா்களுக்கு ஓராசிரியா் உள்ளாா். ஓராசிரியா் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை 3,671. கடந்த 2023-24-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024-25-ஆம் கல்வி ஆண்டில், நாட்டில் ஓராசிரியா் பள்ளிகள் சுமாா் 6 சதவீதம் குறைந்துள்ளது. இதேபோல மாணவா் சோ்க்கையே இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கையும் சுமாா் 38 சதவீதம் சரிந்துள்ளது.
2023-23, 2023-24-ஆம் கல்வி ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2024-25-ஆம் கல்வி ஆண்டில் மாணவா்கள் இடைநிற்றல் விகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.
இடைநிற்றல் விதிகம் (சதவீதத்தில்)
ஆண்டு தொடக்க நிலை நடுநிலை மேல்நிலை
2023-24 3.7 5.2 10.9
2024-25 2.3 3.5 8.2