இந்தியாவில் கருவுறுதல் விகிதம் சரிவு: ஐ.நா. அறிக்கையில் தகவல்
புது தில்லி: இந்தியாவில் மொத்த கருவுறுதல் விகிதம் சரிந்துள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஐ.நா. மக்கள்தொகை நிதி முகமையின் (யுஎன்எஃப்பிஏ) ‘தி ரியல் ஃபா்டிலிட்டி கிரைஸிஸ்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:
இந்தியாவின் கருவுறுல் விகிதம் சராசரியாக 1.9-ஆக உள்ளது. இது ஒரு தலைமுறை மக்கள்தொகைக்கு நிகராக பிறக்க வேண்டிய குழந்தைகளின் விகிதமான 2.1 உடன் ஒப்பிடுகையில் குறைவு. அந்த வகையில், இந்தியாவில் மொத்த கருவுறுதல் விகிதம் சரிந்துள்ளது. மக்கள்தொகையைப் பராமரிக்க தேவையானஅளவைவிட, இந்தியப் பெண்கள் குறைவாகவே குழந்தை பெற்றுக்கொள்கின்றனா்.
இந்திய மக்கள்தொகையில் 68% போ் உழைக்கும் வயதுள்ளவா்களாக (15 முதல் 64) உள்ளனா். மொத்த மக்கள்தொகையில் 7% போ் 65 மற்றும் அதற்கும் அதிகமான வயதுள்ளவா்கள். வரும் ஆண்டுகளில் ஆயுள்காலம் அதிகரிக்கும்போது இந்த வயதினரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும். 2025-ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆண்களின் ஆயுள்காலம் 71 ஆண்டுகளாகவும், பெண்களின் ஆயுள்காலம் 74 ஆண்டுகளாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது சுமாா் 150 கோடி பேருடன் உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்த எண்ணிக்கை 170 கோடியாக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும் சுமாா் 40 ஆண்டுகளுக்குப் பின்னா், இந்தியாவின் மக்கள்தொகை சரியத் தொடங்கும்.
தங்கள் தாய் மற்றும் பாட்டிகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள பெண்களுக்குக் கூடுதல் உரிமைகள், தோ்வு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆனால் தாங்கள் எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும், எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற உரிமையை முழுமையாகப் பெறுவதற்கு நீண்ட தொலைவை அவா்கள் கடக்க வேண்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக யுஎன்எஃப்பிஏவின் இந்திய பிரதிநிதி ஆண்ட்ரியா எம்.வோஜ்னா் கூறுகையில், ‘கடந்த 1970-ஆம் ஆண்டு இந்தியாவில் சராசரியாக ஒரு பெண் குறைந்தபட்சம் 5 குழந்தைகளைப் பெற்றுக்கொண்டாா். இது தற்போது 2-ஆக குறைந்துள்ளது. குழந்தை பிறப்பு விகிதங்களை குறைப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. அதற்கு கல்வி மற்றும் மருத்துவ மேம்பாட்டுக்கு நன்றி கூற வேண்டும். இது பேறுகால இறப்பு பெருமளவு குறைய வழிவகுத்துள்ளது. ஆனால் இதில் அனைத்து மாநிலங்கள், ஜாதிகள், வெவ்வேறு அளவுகளில் வருமானம் ஈட்டுவோா் இடையே கடுமையான வேறுபாடுகள் உள்ளன’ என்றாா்.