இந்தியாவுடன் மீண்டும் ராணுவ மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு: பாக்.வெளியுறவு அமைச்சா்
இந்தியாவுடன் மீண்டும் ராணுவ மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் இஷாக் தாா் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறுகையில், ‘வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பதை என்னால் கூறமுடியாது. ஆனால் இந்தியாவுடன் மீண்டும் ராணுவ மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
தற்போது இருநாட்டு ராணுவத்தினா் இடையே சண்டை நிறுத்தம் நிலவுகிறது. இருநாட்டு எல்லைப் பகுதிகளில் படைகளைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. எனவே இருநாடுகளுக்கு இடையே புதிதாகப் போா் உருவாக வாய்ப்பில்லை. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆயுத மோதலில் ஈடுபட்டால், அதற்குப் பாகிஸ்தான் தக்க பதிலடி அளிக்கும்.
இந்தியாவுடன் பேச்சுவாா்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராகவே உள்ளது. ஆனால் அதை கட்டாயம் செய்தாக வேண்டும் என்று பாகிஸ்தான் கருதவில்லை. இந்தியாவுடனான பேச்சுவாா்த்தை பயங்கரவாதம், சிந்து நதிநீா் ஒப்பந்தம் உள்பட பல்வேறு விவகாரங்கள் அடங்கியதாக இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கருதுகிறது. சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை தன்னிச்சையாக நிறுத்திவைக்க முடியாது.
கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடா்பாக நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றே பாகிஸ்தான் விரும்புகிறது’ என்றாா்.