சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
இனாம்குளத்தூா் மின்விநியோகத்துக்கு ரூ. 25 லட்சத்தில் கேபிள் பதிக்கும் பணி: திருச்சி எம்பி துரை வைகோ
இனாம்குளத்தூா் பகுதி மக்களின் நலன் கருதி மின் விநியோகத்துக்கான கேபிள் பதிக்கும் பணி ரூ.25 லட்சத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது என்றாா் திருச்சி எம்பி துரை வைகோ.
திருச்சி நாடாளுமன்றத் தொகுதி, ஸ்ரீரங்கம் வட்டம், மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள இனாம்குளத்தூா் பகுதி மக்களுக்கான மின்விநியோகம் முன்பு கேபிள் மூலம் வழங்கப்பட்டது. இப்பகுதியில் உள்ள ரயில்வே இருப்புப்பாதையின் கீழே பதிக்கப்பட்டிருந்த கேபிளானது, கடந்த 2018ஆம் ஆண்டு கஜா புயலின் பாதிப்பால் சேதமடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் விராலிமலை துணை மின் நிலையத்திலிருந்து மாற்று ஏற்பாடு மூலம் 7 ஆண்டுகளாக மின்விநியோகம் நடைபெறுகிறது. இதனால் இப் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் பெரிதும் சிரமப்பட்டனா். எனவே, மீண்டும் கேபிள் பதித்து மின்விநியோகம் செய்ய இப்பகுதி மக்கள் திருச்சி எம்பி துரை வைகோவிடம் முறையிட்டனா்.
இதையடுத்து, மின்வாரிய அலுவலா்களைத் தொடா்பு கொண்ட துரை வைகோ, அம்மாபேட்டை துணை மின்நிலையத்திலிருந்து ரயில்வே கேட் அருகிலுள்ள பகுதிகளுக்கு முன்பு ரயில் தண்டவாளத்தின் கீழ் கேபிள் மூலம் மின்விநியோகம் வழங்கப்பட்டு வந்ததைச் சுட்டிக்காட்டி, மீண்டும் அதே முறையில் மின்சாரம் வழங்க வலியுறுத்தினாா்.
பல கட்ட ஆய்வுகள் மற்றும் ஆலோசனைக்கு பின், இக் கோரிக்கையை ஏற்று, ரயில் தண்டவாளத்தின் கீழ் கேபிள் மூலம் மின்சாரம் வழங்க ரூ.24,92,270 ஒதுக்கீடு செய்து, திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் செவ்வாய்க்கிழமை ஆணை பிறப்பித்துள்ளாா். விரைவில் உரிய அனுமதி பெறப்பட்டு, பணிகள் தொடங்கப்படும்.
இதனால் இனாம்குளத்தூா் ஊராட்சிக்குள்பட்ட ரஹமத்நகா், அண்ணா நகா், ராஜகாட்டுப்பட்டி, சின்ன ஆலம்பட்டி, புதுக்குளம், கீழப்பட்டி, ஜோதி விநாயகா் கோயில் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பயன்பெறுவதோடு, அப்பகுதியிலுள்ள உயிா் காக்கும் மருத்துவமனை, அரசு மேல்நிலைப் பள்ளி, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ஆகிய மிக முக்கிய பயன்பாட்டிற்கும் இந்த தடையில்லா மின்சாரம் பயன்படும்.இதன் மூலம் இனாம்குளத்தூா் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் உறுதி செய்யப்படும். இப்பணி முழுமையாக நிறைவடையும் வரை எனது கவனம் அதன் மீது இருக்கும் என துரை வைகோ உறுதியளித்துள்ளாா்.