இன்று மாலையுடன் ஓய்கிறது தில்லி பிரசாரம்!
தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்.5-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
தலைநகர் தில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு பிப்.5ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்தனியா போட்டியிடுவதால் மும்முனை போட்டி நிலவி வருகின்றது.
முன்னால் முதல்வரும், ஆளும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான கேஜரிவால் போட்டியிடும் புதுதில்லி தொகுதியில் அதிகபட்சமாக 23 பேர் போட்டியில் உள்ளனர். இந்த நிலையில் பரபரப்பாக நடந்துவரும் அரசியல் கட்சி பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகின்றது. இதனால் இறுதிக்கட்ட பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன.
தில்லியில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கடந்த 2 சட்டப்பேரவை தேர்தல்களில் பின்னடைவுகளைச் சந்தித்தது.கடந்த 2015 மற்றும் 2020ல் நடைபெற்ற தேர்தல்களில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்தது.
இந்த நிலையில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ளதால், இன்று முதல் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகிறது. அதற்கான வேலைகளைத் தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தியுள்ளது.
அதேபோன்று வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடப்பதை உறுதி செய்யும் வகையில், பதற்றமான வாக்குச்சாவடிகள் தில்லியின் எல்லைகளில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2020ல் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி 70 தொகுதிகளில் 62 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இந்த முறையும் ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.