வட மாநிலத்தவர்களை இங்கு சேர்ப்பது தவறானது; ஊழலும்கூட: நயினார் நாகேந்திரன் பேட்டி
"இயற்கைக்கும் பேராசைக்கும் இடையிலான போராட்டம்" - டெல்லி வேள்பாரி வெற்றிவிழாவில் எம்.பி-கள் பங்கேற்பு
தலைநகர் டெல்லியில் ‘வீரயுக நாயகன் வேள்பாரியின் வெற்றி விழா கூடுகை’ சிறப்பாக நடந்தேறியது.
ஒரு லட்சம் பிரதிகளுக்கும் மேலாக விற்பனையில் சாதித்த ‘வீரயுக நாயகன் வேள்பாரியின் வெற்றி விழா’ சென்னையில் நடைபெற்றதைத் தொடர்ந்து தலைநகர் புதுடெல்லியில் அரசியலமைப்பு சபை வளாகத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சிறப்பாக நடந்தேறியது.
இவ்விழாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற, மக்களை உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் தொடக்கமாக மக்களவை உறுப்பினர் ஜோதிமணி வரவேற்புரையை வழங்கினார். இந்தியத் தேசிய காங்கிரசின் மக்களவை உறுப்பினர் சுப்ரியா சுலே, சு. வெங்கடேசனின் நாடாளுமன்றப் பேச்சினையும் சிந்தனையையும் கண்டு தான் வியப்பதாகக் கூறினார்.
மேலும், வேள்பாரி நாவல் ஆங்கிலத்தில் வருவதற்காகக் காத்திருக்கிறேன் என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ பேபி, முல்லைக்குத் தேர் அளித்த பாரியின் வரலாற்றைச் சொன்ன சு. வெங்கடேசனின் எழுத்துகள் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் வைக்கம் முஹம்மது பஷீரின் எழுத்துகளோடு ஒத்துள்ளன என்றார். மேலும், வெங்கடேசன் உலக அரங்கில் புகழ்பெற வேண்டும் என்று வாழ்த்தினார்.
அவரைத் தொடர்ந்து, உரையாற்றிய மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, ஒரு எழுத்தாளராக சு. வெங்கடேசன் சிந்திக்கும் விதம் தனித்துவமானது என்றார். அடுத்ததாக உரையாற்றிய மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், வேள்பாரி படமாக்கப்பட வேண்டும் என்றார்.
அவரைத் தொடர்ந்து உரையாற்றிய மக்களவை உறுப்பினர் ஆ. ராசா, மார்க்சியக் கொள்கைகளைத் தன் உயிர் மூச்சாகக் கொண்ட எழுத்தாளர் தொடர்ச்சியாக எழுதவும் பேசவும் வேண்டும் என வாழ்த்தினார். அடுத்ததாக உரையாற்றிய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ப. சிதம்பரம், தன்னுடைய தொகுதியில்தான் வேள்பாரியின் பரம்பு மலை உள்ளது என்றார்.

சு. வெங்கடேசனின் காவல் கோட்டத்திலிருந்து வேள்பாரியின் மொழி வேறுபட்டது என்றும், காவல் கோட்டத்தை தமிழ் மாணவர்களும் ஆய்வாளர்களும் மட்டுமே வாசிக்க முடியும். ஆனால், வேள்பாரியை எளியோர் யாவரும் வாசிக்க முடியும் என்றும் அதற்குக் காரணம் ஆனந்த விகடன்தான் என்றும் கூறினார்.



மேலும், வேள்பாரியின் கதைக்களம் வேளிர்க்கும் வேந்தர்க்கும் இடையிலான வர்க்கப்போராட்டத்தை உள்ளீடாகக் கொண்டது என்றார். எளிய மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தைச் சித்தரிப்பதாக வேள்பாரி உள்ளதென்றும், தற்கால மக்களின் போராட்டங்களையும் சு. வெங்கடேசன் எழுத வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அவரைத் தொடர்ந்து உரையாற்றிய உத்தரப்பிரதேச சமாஜ்வாதி கட்சியின் மக்களவை உறுப்பினர் டிம்பிள் யாதவ், தன் சார்பாகவும் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் அவரின் கணவருமாகிய அகிலேஷ் யாதவ்வின் சார்பாகவும் எழுத்தாளர் சு. வெங்கடேசனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அவரைத் தொடர்ந்து ஏற்புரை வழங்கிய எழுத்தாளர் சு. வெங்கடேசன், "வேள்பாரி என்பது இயற்கைக்கும் மனிதப் பேராசைக்கும் இடையிலான இன்றைய போராட்டத்தின் ஆதி வடிவம்தான். இயற்கையை நேசிக்கிற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் வேள்பாரி" என்றார்.

நிகழ்வின் நன்றியுரையை கேரள நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் வழங்கினார். நிகழ்வினை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்புறத் தொகுத்து வழங்கினார்.