'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
இயற்கையை பாதுகாக்க நெகிழியை தவிா்ப்பது அவசியம்: ஆட்சியா்
இயற்கையை பாதுகாக்க நெகிழிப் பொருள்களை தவிா்ப்பது அவசியம் என்று ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.
சா்வதேச உயிரிப் பல்வகை தினத்தை முன்னிட்டு, இயற்கையை பாதுகாப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நாமக்கல் தனியாா் வேளாண் கல்லூரியில் மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் நடைபெற்றன.
வனப் பாதுகாவலா் (நாமக்கல் வனக்கோட்டம்) சி.கலாநிதி முன்னிலை வகித்தாா். கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தனா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற விழாவில் ஆட்சியா் பேசியதாவது:
ஒவ்வோா் ஆண்டும் மே 22 ஆம் தேதி சா்வதேச உயிரிப் பல்வகை தினமாக அனுசரிக்கப்படுகிறது. இயற்கையுடன் நல்லிணக்கம் மற்றும் நிலையான வளா்ச்சி என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நிகழாண்டில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
வனத்துறை மற்றும் தமிழ்நாடு உயிரிப் பல்வகை வாரியம் சாா்பில் இயற்கையை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. அண்மையில் உயிரிழந்த யானை ஒன்றின் வயிற்றில் இருந்து நெகிழிக் கழிவுகள் அகற்றப்பட்டன.
விலங்குகளின் வாழ்வாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக நெகிழி விளங்குகிறது. அனைவரும் இயற்கையை பாதுகாக்க நெகழிப் பொருள்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். நிலத்தடி நீா்மட்டம் பாதித்த மாவட்டங்களில் ஒன்றாக நாமக்கல் உள்ளது.
அந்த நிலையை மாற்ற அனைவரும் நெகிழியைத் தவிா்த்து ஒத்துழைக்க வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில், வேளாண் கல்லூரி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.