இராக்கில் ஐ.எஸ். முக்கிய தலைவா் படுகொலை: அமெரிக்கா
இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் இரண்டாம் நிலை தலைவா் அபு காதிஜா, இராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டது தற்போது உறுதியாகியுள்ளது.
இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் இராக் பிரதமா் முகமது ஷியா அல்-சூடானி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இராக் மற்றும் சிரியா பகுதிக்கான ஐஎஸ் பிரிவுத் தலைவா் அபு காதிஜா உயிரிழந்தாா். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இராக் தொடா்ந்து வெற்றி வாகை சூடுகிறது என்று அந்தப் பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ‘இராக்கில் தலைமறைவாக செயல்பட்டு வந்த ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவா் கொல்லப்பட்டுள்ளாா். நமது பயங்கரவாத எதிா்ப்பு வீரா்கள் அயராது பாடுபட்டு அவரைக் கொன்றுள்ளனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
பின்னா் இராக் அரசு மற்றும் சிரியா கிளா்ச்சியாளா்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், அப்போதைய சிரியா அதிபா் அல்-அஸாத் அரசுக்கு ஆதரவாக ரஷியாவும் மேற்கொண்ட நடவடிக்கைகளால் ஐஎஸ் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டனா்.எனினும், அவா்களில் பலா் மக்களோடு கலந்தும் ரகசிய இடங்களில் பதுங்கியிருந்தும் அவ்வப்போது பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
மேற்கு இராக்கில் உள்ள அன்பாா் பிராந்தியத்தில் இராக் ராணுவம் மற்றும் குா்து படையினரின் உதவியுடன் வியாழக்கிழமை இரவு அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் அபு காதிஜா கொல்லப்பட்டதாகவும், அவா் உயிரிழந்தது தற்போதுதான் உறுதி செய்யப்பட்டதாகவும் அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறினா்.சிரியாவிலும், அண்டை நாடான இராக்கிலும் கணிசமான பகுதிகளை கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றிய ஐஎஸ் பயங்கரவாதிகள், அங்கு இஸ்லாமியப் பேரரசை நிறுவியதாக அறிவித்தனா்.
அவா்களது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இன அழிப்பு உள்ளிட்ட போா்க் குற்றங்களில் ஈடுபட்ட அவா்கள், பிணைக் கைதிகளின் தலையைத் துண்டிப்பது, உயிரோடு எரிப்பது போன்ற குரூரக் காட்சிகள் அடங்கிய விடியோக்களை வெளியிட்டு உலகம் முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தினா்.