பாகிஸ்தான் உள்பட 41 நாடுகளின் குடிமக்களுக்கு பயணத் தடையா? டிரம்ப் சொல்வது என்ன?!
பல நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு அமெரிக்கா செல்வதற்கான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க டிரம்ப் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் 41 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு அமெரிக்க செல்ல பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் தடை விதிக்க முன்மொழிவு தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முன்மொழிவின்படி 3 நிலைகளில் நாடுகளை வகைப்படுத்தி கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளது.
முதல் நிலையில் ஆப்கானிஸ்தான், இரான், சிரியா, கியூபா, வட கொரியா உள்ளிட்ட 10 நாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நாடுகளுக்கு முழுமையாக விசா ரத்து செய்யப்படவுள்ளது.
இதையும் படிக்க | அமெரிக்காவில் ஹமாஸ் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற இந்திய மாணவியின் விசா ரத்து!
இரண்டாவது நிலையில் எரிதீரியா, ஹைதி, லாவோஸ், மியான்மர், தெற்கு சூடான் ஆகிய 5 நாடுகள் உள்ளன. இந்த நாடுகளுக்கு சில நிபந்தனைகளுடன் பகுதி இடைநீக்கங்களுடன் விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் சுற்றுலா, கல்வி, புலம்பெயர்ந்தோருக்கான விசா ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும்.
மூன்றாவது நிலையில் ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள பல நாடுகள், பாகிஸ்தான், பூட்டான் ஆகிய 26 நாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றிக்கு அமெரிக்கா குறிப்பிட்ட சில குறைபாடுகளைக் களைய 60 நாள்களுக்குள் அந்த நாடுகளின் அரசு மேற்கொள்ளாவிட்டால் விசாக்களில் பகுதி இடைநீக்கம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க அரசின் நிர்வாகத் துறை அதிகாரிகள் பேசியபோத், “இந்தப் பட்டியல் பல வாரங்களுக்கு முன்பு வெளியுறவுத் துறையால் உருவாக்கப்பட்டது. சிவப்பு, ஆரஞ்ச், மஞ்சள் என 3 நிலைகளில் நாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இறுதிப் பட்டியல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதில் மாற்றங்கள் இருக்கும். இந்த முன்மொழிவு அமெரிக்க நிர்வாகத் துறை செயலாளர் மார்கோ ரூபி ஒப்புதலுக்காகக் காத்திருப்பில் உள்ளது” என்று தெரிவித்தனர்.
இந்த முன்மொழிவு தொடர்பாக அமெரிக்க அரசு நிர்வாகம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் கொடுக்கவில்லை.
தற்போதைய பயணத்தடை மற்றும் கட்டுப்பாடு தொடர்பான செய்திகள் டிரம்ப்பின் முந்தைய ஆட்சிக்காலத்தில் பெரும்பான்மை இஸ்லாமிய நாடுகளுக்கு விதித்த தடையைப் போன்றே உள்ளது.
பல திருத்தங்களைச் சந்தித்த அந்த கொள்கை இறுதியில் 2018- ஆம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதையும் படிக்க | இருளில் மூழ்கிய கியூபா! என்ன நடந்தது?
அமெரிக்காவுக்குள் நுழையும் வெளிநாட்டவர்களின் பாதுகாப்பு சோதனைகளை மேம்படுத்துவதற்கான ஆணையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் டிரம்ப் கையெழுத்திட்டார். அதன்மூலம், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அடையாளம் காண முயற்சிப்பதாக அவர் தெரிவித்தார்.
உத்தரவின் ஒரு பகுதியாக போதுமான பாதுகாப்பு நடைமுறைகள் இல்லாத நாடுகளுக்கு பயணத் தடைகளை விதிக்க அவற்றின் பட்டியலை உருவாக்கும் பணியில் அமெரிக்க வெளியுறவுத் துறை ஈடுபட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, டிரம்ப் மீண்டும் குடியேற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2023 அக்டோபரில் டிரம்ப் தனது உரையில் காஸா, லிபியா, சோமாலியா, சிரியா, யேமன் மற்றும் நமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் எந்த நாடாக இருந்தாலும் அவற்றிற்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக டிரம்ப் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.