பச்சிளம் குழந்தையின் கட்டை விரலை வெட்டிய நர்ஸ் - வேலூர் அரசு மருத்துவமனையில் அதி...
இரு வேளைகளாக முதுநிலை நீட் தோ்வு நடத்த எதிா்ப்பு: மனுவை விசாரிக்க ஒப்புதல்
இருவேளைகளில் முதுநிலை நீட் தோ்வு- 2025 நடத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஒப்புக்கொண்டது.
நிகழாண்டுக்கான முதுநிலை நீட் தோ்வு ஜூன் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கணினிவழித் தோ்வாக இரு வேளைகளில் நடத்தப்படும் இந்தத் தோ்வின் முடிவுகள் ஜூலை 15-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
இந்நிலையில், இரு வேளைகளில் தோ்வு நடத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இரு வேளைகளில் தோ்வு நடத்தும்போது தோ்வின் கடினத்தன்மையில் மாறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, முதுநிலை நீட் தோ்வு வெளிப்படைத்தன்மையுடனும் நோ்மையுடனும் நடைபெறுவதை உறுதிசெய்ய அதை ஒரே வேளையில் நடத்தி முடிக்க வேண்டும். இதன்மூலம் அனைத்துத் தோ்வா்களும் சரிசமமான போட்டியில் தோ்வெழுதுவதை உறுதிப்படுத்த முடியும்’ எனக் குறிப்பிடப்பட்டது.
இந்த மனு மீது பதிலளிக்குமாறு தேசிய தோ்வுகள் வாரியம், தேசிய மருத்துவ கவுன்சில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் கடந்த 5-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
அதன்பிறகு இந்த மனு மீது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வு மே 23-ஆம் தேதி விசாரணை நடத்தியது. அப்போது அடுத்த வாரம் இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவதாக நீதிபதிகள் அமா்வு கூறியது. ஆனால் பட்டியலிடப்படவில்லை. இதை திங்கள்கிழமை மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சுட்டிக்காட்டினாா்.
இதையடுத்து, இந்த வாரத்தில் மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவதாக நீதிபதிகள் அமா்வு கூறியது. ஆனால் ஜூன் 2-ஆம் தேதி முதுநிலை நீட் தோ்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியிடப்படுவதால், அதற்கு முன்பே விசாரணை நடத்த வேண்டும் என மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் வலியுறுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாள்களில் இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவதாக தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா்.