`இலக்கியம் இலக்கியமாகவே இருக்க வேண்டும் என்று எண்ணுவதுகூட ஓர் அரசியல்தான்!' - திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் விடுதலைக் கலை இலக்கிய பேரவை நடத்திய `இளவந்திகை திருவிழா' சர் பிட்டி தியாகராசர் ஹாலில் நடந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இலக்கியத்தில், கலையில், சினிமாவில் ஒலித்து வரும் முக்கிய நபர்களுக்கு `எழுச்சித் தமிழர்' இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டது.
பண்டைய தமிழகத்தில் காதலைக் கொண்டாடும் விழாவாக இளவந்திகை என்பது இருந்தது. “இளவந்திகையில் காதல் என்ற ஒரு செயலை, அல்லது மனித உணர்வை, எல்லா உயிர்களின் உணர்வையும், போற்றுகிற மிகப்பெரிய விழா இளவந்திகை. காதலர்களை அழைத்து, விருந்தளித்து, சான்றோர்களை அழைத்து, வாழ்வு குறித்த அறத்தை அவர்களுக்குச் சொல்லி கொடுத்த ஒரு விழாதான் இளவந்திகை.” என்கிறார் கவிஞர் யாழன் அதி.
“என் தாத்தாவுக்கு ஒடுக்குமுறை அதிகமாக இருந்தது, ஆனால் கோபம் இல்லை, என் அப்பாவுக்கு ஒடுக்குமுறை கம்மியா இருந்துச்சு. ஆனால், கோபம் ஓரளவு இருந்துச்சு. எனக்கு பெரிய ஒடுக்குமுறைலாம் இல்லை. ஆனால், எனக்கு கோபம் அதிகமாக இருக்கு. ஏனென்றால், என்னுடைய அரசியல் ஜனநாயக அரசியல். இந்த விருதுகளை நான் ஜனநாயக விருதுகளாகத்தான் பார்க்கிறேன்.” என நிகழ்வில் பேசிய கோபி நயினார் கூறினார். இவர் சமீபத்தில் பெரியார் விருதை திருப்பி அளிப்பதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீலம் தயாரிப்பில் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்திற்கு திரை விருது வாங்கிய இயக்குநர் ஜெயக்குமார், “ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் ஒருபோதும் அடி பணியாது, யாரிடமும் போய் நிற்காது. எப்பவுமே சமரசமே பண்ணிக்க மாட்டார்கள், அவங்க கொள்கைக்காக நிப்பாங்க. ப்ளூ ஸ்டார் படத்துக்கான விருதை நான் உண்மையான ப்ளூ ஸ்டார் கிட்ட இருந்து வாங்குகிறேன்” என்று நெகிழ்ச்சி அடைந்தார்.
சால்ட் பதிப்பகத்தின் முக்கிய வெளியீடாக வந்த ‘செந்திலம்’ நூலுக்கு சிறந்த சிறுகதை நூலுக்கான விருது கிடைத்துள்ளது. இதை பத்திரிகையாளர்-எழுத்தாளர் ஜெயராணி படைத்துள்ளார்.

ஏற்புரை வழங்கிய ஜெயராணி தன் களப்பணிகளை நினைவு கூறினார். ``இதழியல் மாணவியாக என்னுடைய முதல் கட்டுரை மாஞ்சோலை பற்றி இருந்தது. 25 ஆண்டுகள் கழித்து நான் மாஞ்சோலை போய் இன்னும் அந்த மக்களுக்கு நீதி கிடைக்கல அப்படினு எழுத வேண்டியிருக்கு. நான் களத்திற்கு வந்த புதுசுல திண்ணியம் பற்றி, மனித மலத்தை தலித்தின் வாயில் திணிச்ச அவலத்தை கேள்விப்பட்டு ஈரக்குலையே நடுங்கிருச்சு. ஆனா இன்னிக்கு வேங்கைவயல் நடக்குது. ஊர்களோட பேர் மாறுது, மனிதர்களோட பேர் மாறுது. ஆனால், இந்த சமூகம் ஒரு அடிகூட நகர்ந்து வரவில்லை என்று ஓர் அயற்சி வந்துவிட்டது. கட்டுரை நான் எழுதும்போது, அதில் உள்ள வன்கொடுமைகளை, வன்முறைகளை என்னால் மாற்ற முடியாது. அப்படியேதான் நான் எழுதியாக வேண்டும். ஆனால், புனைவு கொடுக்கும் சுதந்திரம் முடிவுகளை மாற்ற வைத்தது. செத்துபோன ஒருவரை இந்த கதை மூலம் பிழைக்க வைக்க முடியும், நீதி கிடைக்காத ஒருவனுக்கு நீதி வாங்கி தர முடியும். அடி வாங்கிட்டு இருப்பவருக்கு திருப்பி அடிக்கும் தைரியத்தை இந்த கதைகள் மூலம் கொடுக்க முடியும்.” என்றார்.
“இலக்கியம் இலக்கியமாகவே இருக்க வேண்டும் என்று எண்ணுவதுகூட ஒரு அரசியல் தான். பண்பாட்டு தளங்களில் அரசியல் கலக்கக் கூடாது என்று நாம் சொல்வோம், ஆனால், எல்லாவற்றிலும் அரசியல் இணைந்தே இருக்கும், இணைந்தே இருக்கும்.” என்று கூறினார் தொல் திருமாவளவன்.

கூடுதலாக கோபி நயினார் விருதைத் திருப்பிக் கொடுப்பது பற்றி திருமாவளவன் ஆலோசனை அளித்தார். “திராவிடர் கழகத்தில் எவனோ ஒருவன் சமூக வலைதளத்தில் எழுதுகிறான் என்றால், அதற்காக ஐயா ஆசிரியர் வீரமணி அவர்கள் கொடுத்த விருதைத் திருப்பி கொடுக்கக் கூடாது. கோபி நயினார் அப்படிச் சொன்னதைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.” என்றார் தொல்.திருமாவளவன்.
பறையோசை, அம்பேத்கர் பாடல்கள், கானா இசை, இலக்கிய உரைகள் எனப் பண்பாட்டுக் கிளர்ச்சியாக நிகழ்வு இருந்தது.