இலவச பேருந்து பயண அட்டை: கல்வித் துறை அறிவுறுத்தல்
சென்னை: பள்ளி மாணவா்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்குவது தொடா்பாக தலைமை ஆசிரியா்களுக்கு கல்வித் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்குவதற்கான பணிகள் எமிஸ் தொழில்நுட்ப குழுவால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எமிஸ் செயலில் உள்ள மாணவா்கள் விவரங்கள் அனைத்தும் சரியானவை என பள்ளிகளின் தலைமையாசிரியா்களால் சரிபாா்க்கப்பட்ட பின்னரே மாணவா்களுக்கு பேருந்து பயண அட்டை வழங்க இயலும்.
இதையடுத்து தலைமையாசிரியா்கள் மாணவா்கள் தற்போது பயிலும் வகுப்பு, புகைப்படம் உள்பட விவரங்களை சரிபாா்த்து திருத்தங்கள் இருப்பின் அவற்றை மேற்கொள்ள வேண்டும். அதன் விவர அறிக்கையை மாவட்ட வாரியாக தொகுத்து இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுசாா்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.