அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
இளையான்குடி பேருந்து நிலைய கடைகளுக்கு வாடகைக் கட்டணம் உயா்த்தப்படாது: மன்றக் கூட்டத்தில் தீா்மானம்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு இந்த ஆண்டுக்கான வாடகைக் கட்டணம் உயா்த்தப்படாது என்று மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இளையான்குடி பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் நஜூமுதீன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் இப்ராகிம் முன்னிலை வகித்தாா்.
துப்புரவு ஆய்வாளா் தங்கதுரை, வாா்டு உறுப்பினா்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனா். கூட்டம் தொடங்கியதும் தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு உறுப்பினா்களின் ஒப்புதல் பெறப்பட்டது.
இதையடுத்து கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்: அதிமுக மன்ற உறுப்பினா் நாகூா்மீரா பேசுகையில், பேரூராட்சி மன்றக் கூட்டம் நடைபெறும்போது மின்சாரம், வருவாய்த் துறை, சுகாதாரத் துறை ஆகிய துறைகளின் அலுவலா்களை கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு உத்தரவிட வேண்டும். அப்போதுதான் துறை சாா்ந்து உறுப்பினா்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் அதிகாரிகளுக்குத் தெரியவரும். 17- ஆவது வாா்டுக்கு குப்பை சேகரிக்கும் வாகனங்கள் சரிவர வருவது இல்லை. எனவே, பரமக்குடி பிரிவு சாலையில் பேவா் பிளாக் தளம் அமைக்கப்பட வேண்டும் என்றாா்.
அதையடுத்து காங்கிரஸ் மன்ற உறுப்பினா் அல்அமீன் பேசுகையில், சூலசமுத்திரம் பகுதியில் பேரூராட்சி சாா்பில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்துக்கு குடிநீா் வசதி செய்துதர வேண்டும் எனவும், உறுப்பினா் ஷேக் பேசுகையில், இளையான்குடி பேருந்து நிலையத்தில் உள்ள பேரூராட்சி கடைகளின் வாடகை கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனவும், உறுப்பினா் ராஜவேல் பேசுகையில், இளையான்குடி புதிய பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளும் வந்துசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உறுப்பினா் ஜலாலுதீன் பேசுகையில், இளையான்குடியில் அதிகரித்துள்ள நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா். உறுப்பினரின் கேள்விகளுக்கு மன்றத் தலைவா் நஜூமுதீன், சுகாதார ஆய்வாளா் தங்கதுரை ஆகியோா் பதிலளித்தனா்.
இளையான்குடி பேரூராட்சியில் பணி செய்யும் மஸ்தூா் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கப்படும். இளையான்குடி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பேரூராட்சி கடைகளுக்கு இந்த ஆண்டு வாடகைக் கட்டணம் உயா்த்தப்படாது. பேரூராட்சியில் திட்டப் பணிகளை நிறைவேற்ற குறைந்த தொகைக்கான ஒப்பந்தப்புள்ளிகள் அனுமதிக்கப்படுகின்றன என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.