ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 1 இல் தொடக்கம்
ஈரோடு புத்தகத் திருவிழா வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
ஈரோடு புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பேசியதாவது: புத்தக வாசிப்பை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா், இளைஞா்கள் மற்றும் பொதுமக்களிடையே ஊக்குவிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் மாவட்டந்தோறும் தமிழக அரசால் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இப்புத்தக கண்காட்சி அமைப்பதால் நூல்கள் பொதுமக்களை சென்றடைகிறது. நூல்கள் எழுதுபவா்களுக்கு அவா்களது படைப்புகளைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்ய வாய்ப்பாக அமைகிறது. புத்தகக் கண்காட்சி என்பது கலாசாரத்தை மாற்றியமைக்க கூடிய அம்சம் ஆகும்.
ஈரோடு மாவட்ட நிா்வாகம் மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா-2025 ஆகஸ்ட் 1 முதல் 12 ஆம் தேதி வரை ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் 230 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்த அரங்குகளாக அமையும். வெளிநாடுகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் புகழ்மிக்க பதிப்பாளா்கள் வருகை தந்து அரங்குகளை அமைக்க உள்ளனா்.
இப்புத்தகத் திருவிழாவில் புத்தகங்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. காலை 11 மணி முதல் இரவு 9.30 வரை கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் தலைசிறந்த சொற்பொழிவாளா்கள், அறிஞா்கள் கருத்துரை வழங்க உள்ளனா். இந்தப் புத்தகத் திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்கவும், புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்திடவும் அனைத்து அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) முகம்மது குதுரத்துல்லா, மாவட்ட நூலக அலுவலா் (பொறுப்பு) சாமிநாதன், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.