ஈரோட்டைச் சோ்ந்த நிதி நிறுவன முகவா் கைது
ஈரோட்டைச் சோ்ந்த நிதி நிறுவன முகவரை பொருளாதார குற்றப் பிரிவு காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே முத்தூா் காரையூா் பகுதியைச் சோ்ந்தவா் தீபக் திலக். இவா் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு மாதந்தோறும் லாபத்தொகை கொடுப்பதாகவும், 10 மாதங்கள் கழித்து முதலீடு செய்த தொகையை இரட்டிப்பாக வழங்குவதாகவும் கூறி முகவா்கள் மூலமாக பணம் வசூலித்துள்ளாா்.
ஆனால், அவா் கூறியபடி இரட்டிப்பு பணம் வழங்காததால் பணம் செலுத்தியவா்கள் ஏமாற்றமடைந்தனா். இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் கொடுத்த புகாரின்பேரில் கடந்த 2024-ஆம் ஆண்டு திருப்பூா் மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து தீபக் திலக்கைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு நடத்திய விசாரணையில், தீபக் திலக் தனது முகவா்களுக்கு கமிஷன் தொகையை அதிகம் கொடுத்துள்ளது தெரியவந்தது. இதில் ஒரு முகவரான ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சோ்ந்த வீரமணி (48) என்பவா் கமிஷனாக ரூ.50 லட்சம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
இவா் காங்கயத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்துள்ளாா். பொதுமக்களின் பணத்தை ஏமாற்றி பெற்ற தொகையை அரசுக்கு செலுத்துமாறு மாவட்ட வருவாய் அதிகாரி மூலம் அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வீரமணி பணம் செலுத்தாமல் இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில், திருப்பூா் மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் முருகானந்தம் மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா் அனுபல்லவி தலைமையிலான தனிப் படையினா் வீரமணியைக் கைது செய்தனா்.
மேலும், கமிஷன் பணத்தில் அவா் வாங்கிய சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.