உறுதியளிப்பு சான்று அளிக்காத மருத்துவக் கல்லூரிகளுக்கு அபராதம்
இளநிலை மருத்துவப் படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகள், வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபாா்ம்) சமா்ப்பிக்க ரூ.50,000 அபராதத்துடன் மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநா் சுக்லால் மீனா வெளியிட்ட அறிவிப்பு:
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அனுமதி பெற்றுள்ள மருத்துவக் கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் தங்களது சுய விவரங்கள் அடங்கிய ஆண்டு உறுதியளிப்பு சான்றை என்எம்சி வலைதளப் பக்கத்தில் பதிவேற்றுவது அவசியம்.
அங்கீகாரம் புதுப்பித்தலுக்கும் அத்தகைய பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கான அவகாசம் பல முறை கொடுக்கப்பட்டும், நான்கு முறை அறிவிக்கை வெளியிட்டும் இன்னமும் சில கல்லூரிகள் உறுதியளிப்பு சான்றுகளை சமா்ப்பிக்கவில்லை எனத் தெரிகிறது.
இதையடுத்து அதற்கு மறுவாய்ப்பு அளிக்கும் வகையில் வரும் ஏப்.10-ஆம் தேதிக்குள் ரூ.50,000 அபராதத் தொகையுடன் ஆண்டுக்கான உறுதியளிப்பு சான்றுகளை அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களும் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.