Janhvi Kapoor: அம்மாவின் சேலையில் ஜொலித்த ஜான்வி கபூர் - க்ளாசிக் க்ளிக்ஸ்!
உலகளாவிய புத்தாக்கக் குறியீடு: விரைவில் இந்தியா முன்னிலை- அமித் ஷா நம்பிக்கை
உலக அளவில் புத்தாக்கக் குறியீட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் 10 முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
குஜராத் மாநில அரசு காந்திநகரில் நடத்தும் புத்தாக்க (ஸ்டார்ட்-அப்) மாநாட்டில் செவ்வாய்க்கிழமை பங்கேற்று அவர் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் தொடங்கப்பட்டுள்ள "ஸ்டார்ட்-அப் இந்தியா' திட்டம் தற்போது நல்ல பலனை அளித்து வருகிறது. உலக அளவில் தற்போது புத்தாக்க நிறுவனங்களை அதிக அளவில் கொண்டுள்ள மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டம், நமது இளைஞர்களை வேலை தேடுவோர் என்ற நிலையில் இருந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவோர் என்ற நிலைக்கு மாற்றியுள்ளது.
சமீபத்தில் உலக அளவிலான புதுமை படைத்தல் குறியீட்டு எண்கள் அறிவிக்கப்பட்டன. இந்தத் தரவரிசையில் கடந்த 2015-இல் 91-ஆவது இடத்தில் இருந்த இந்தியா 2025-இல் 38ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நமது மக்களின் திறனை இது காட்டுகிறது. உலக அளவில் புத்தாக்கக் குறியீட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் 10 முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
கடந்த 2014-இல் நம் நாட்டில் 500 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. தற்போது 1.92 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், அரசிடம் பதிவு செய்துள்ளன.
ஒட்டுமொத்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் 52 சதவீத நிறுவனங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலை நகரங்களில் அமைந்துள்ளன. மொத்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் 48 சதவீத நிறுவனங்கள் பெண்களால் தொடங்கப்பட்டுள்ளன.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மூலம் 17.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. ஆண்டுதோறும் 17,000 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. அவற்றில் 9,000 நிறுவனங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலை நகரங்களில் அமைகின்றன.
ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டத்தைத் தொடங்கியபோது, இத்திட்டத்துக்காக உரிய சூழல் உருவாக்கப்படாவிட்டால் இது வெற்றி பெறாது என்பதை மத்திய அரசு அறிந்திருந்தது. கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து பிரதமரின் தலைமையில் நிதி, உள்கட்டமைப்பு, கொள்கை மற்றும் வங்கி ஆதரவு ஆகியவை ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டது. ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக ரூ.10,000 கோடி நிதி உருவாக்கப்பட்டது.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக உயர்த்தப்பட்டது. பல்வேறு வரிச் சலுகைகளும் அளிக்கப்பட்டன.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய தொழில்துறைத் தலைவர்கள் முன்வர வேண்டும். நாட்டின் ஸ்டார்ட்-அப் துறையில் கடந்த 4 ஆண்டுகளாக குஜராத் முன்னிலை வகித்து வருகிறது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், அவரது அமைச்சர்கள் குழு மற்றும் அரசு அதிகாரிகள் இணைந்து ஸ்டார்ட்-அப் புரட்சியின் மையமாக இந்த மாநிலத்தை உருவாக்கியுள்ளனர். குஜராத்தில் 16,000 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உள்ளன என்றார் அவர்.