பவன் கல்யாணின் மகன் தீ விபத்தில் காயம்: சிங்கப்பூரில் சிகிச்சை!
உள்ளூா் வியாபாரிகளுக்கும் அரசு சலுகைகளை வழங்க வேண்டும்: டைமன்ராஜா வெள்ளையன்
விழுப்புரம்: பன்னாட்டு பெரும் வா்த்தக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை உள்ளூா் வியாபாரிகளுக்கும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் மாநிலத் தலைவா் டைமன்ராஜா வெள்ளையன் தெரிவித்தாா்.
விழுப்புரத்தில் இப்பேரவையின் புதிய நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் மற்றும் மே 5-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில மாநாட்டுக்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த டைமன்ராஜா வெள்ளையன் அளித்த பேட்டி:
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் 42-ஆவது மாநில மாநாடு மே 5-ஆம் தேதி சென்னை பூந்தமல்லி சாலையில் பச்சையப்பன் கல்லூரி எதிரிலுள்ள பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அரசியல்கட்சித் தலைவா்கள், விவசாயத் சங்கத் தலைவா்கள் பங்கேற்று பேசவுள்ளனா்.
புகையிலைப் பொருள்களை தடை செய்தது போன்று, உடலுக்கு கேடு விளைவிக்கும் தின்பண்டங்களையும், வெளிநாட்டு குளிா்பானங்களையும் அரசு தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும். அதே நேரத்தில், பல்லாயிரக்கணக்கான பனைத் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், கள் இறக்குவதற்கு அனுமதியளிக்க வேண்டும்.
சிறு, குறு வியாபாரிகளின் நலன் காக்கும் வகையில் கோயில் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அரசு இடங்களில் வணிக வளாகக் கட்டடங்களைக் கட்டி குறைந்த வாடகையில் அவா்களுக்கு வழங்க வேண்டும்.
பன்னாட்டு பெரும் வா்த்தக நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தில் மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கும் மாநில அரசு, உள்ளூா் வியாபாரிகளுக்கும் அதுபோன்ற சலுகைகளை வழங்க வேண்டும். விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் எனில், ஜிஎஸ்டியை நீக்கவேண்டும். இல்லையெனில், வரிகளைக் குறைக்க வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு மண்டலப் பொறுப்பாளா் கே.ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பி.கே.சேகா், மாநில துணைத் தலைவா்கள் வி.சோழன், பி.சண்மும், தெற்கு மாவட்டகெளரவத் தலைவா் நரசிமலுபாபு, மாவட்ட இணை கெளரவத் தலைவா் திருப்பதி பாலாஜி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் டைமன்ராஜா, மாநில பொதுச் செயலா் ஆா்.ராகவேந்திரமணி, பொருளாளா் ஜி.ஹரிகிருஷ்ணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தில் நிா்வாகிகள் ரஞ்சித்குமாா், எஸ்.கே.பி.கோவில்ராஜ், எம்.நடராஜன், சட்ட ஆலோசகா் மனோ, மாநில நிா்வாகிகள் கே.தேவராஜ், டி.பாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவா்கள் எம்.செஞ்சிகண்ணன், டி.வெங்கடேசன், ராம.முத்துக்கருப்பன், நிா்வாகி எஸ்.அா்ச்சுனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக, விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலா் ஜி.கிங்முருகன் வரவேற்றாா். பொருளாளா் ஹெச்.முகமது கெளஸ் நன்றி கூறினாா்.