Nithyananda: ``கைலாசா நாடு அல்ல'' - நித்யானந்தா சீடர்கள் 20 பேரை நாடுகடத்திய பொல...
ஊத்தங்கரை: திமுக கொடிக்கம்பம் அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்!
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே திமுகவின் கொடிக்கம்பத்தை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து இன்று காலை ஒருவர் பலியானார்.
மேலும், நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க : மெட்ரோ தூணில் மோதி விபத்து: சேப்பாக்கத்தில் இருந்து திரும்பிய மாணவர்கள் பலி!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூன்றம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கேத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (50). இவர் கேத்துநாய்க்கன்பட்டி திமுக கிளைச் செயலாளராக பணியாற்றி வந்தார்.
திமுக தலைமையின் உத்தரவைத் தொடர்ந்து, கேத்துநாயக்கன்பட்டியில் பொது இடத்தில் உள்ள திமுக கொடி கம்பத்தை அகற்றும் பணியில் திமுகவினர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது கொடிக்கம்பம் எதிர்பாராத விதமாக மின்சாரக் கம்பி மீது சாய்ந்தது.
இதில் மின்சாரம் பாய்ந்ததில் ராமமூர்த்தி, கூலி தொழிலாளி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவர்களை பரிசோதித்த மருத்துவர் ராமமூர்த்தி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.
மேலும், கேத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் (58), பெருமாள் (46), முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பூபாலன் (50), சர்க்கரை (55) உள்ளிட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த திமுக ஒன்றியச் செயலாளர் குமரேசன், நகர அவைத் தலைவர் தணிகை குமரன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆறுதல் கூறினர்.
ராமமூர்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.