அரசியல் கட்சி நிகழ்வுகளுக்கு காவல் துறை பாதுகாப்பு: கட்டணம் வசூலிக்க உயா்நீதிமன்...
எதிா்கட்சி மாநிலங்களை அமலாக்கத் துறை மூலம் மத்திய அரசு மிரட்டுகிறது: கனிமொழி
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களை மிரட்ட மத்திய அரசு அமலாக்கத் துறையை பயன்படுத்துவதாக நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
சா்வதேச மகளிா் தின கொண்டாட்டத்தையொட்டி சென்னை, வள்ளுவா் கோட்டம் அருகில் உள்ள தெரசா வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
மகளிரை வாழ்த்தக்கூடிய தினம் இதுவல்ல. பெண்கள் இன்னும் செல்லக்கூடிய தூரம் நிறையவுள்ளது என்பதை நினைவில் கொள்ளக்கூடிய தினம் இது. முன்பு சாதாரண பின்புலத்திலிருந்து வரக்கூடிய பெண்கள் வெளியில்கூட வரமுடியாது. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. அதனால் பெண்கள் பெரிய சாதனைகளை செய்து வருகின்றனா்.
பெண்களை மதிக்க ஆண்கள் கற்றுக்கொள்ள வேண்டும். பெண்களின் கல்வி எந்த விதத்திலும் தடைபடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு, பெண்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றாா் அவா்.
தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்க ஒன்று. புதிய தொழிற்சாலைகள், கல்வி, பெண்கள் முன்னேற்றம் என பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் குறித்து வெளியிட்டுள்ள பல அறிவிப்புகளுக்கு எனது வாழ்த்துகள்.
ரூபாய் குறியீடு மாற்றியது இந்திய இறையாண்மைக்கு எதிரானது, பிரிவினைவாதத்தை ஊக்கும்விக்கும் என மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் விமா்சனத்துக்கு பதில் அளித்த கனிமொழி, ‘தமிழில் இருந்து ஒரு எழுத்தை போடுவது இறையாண்மைக்கு எதிரானது என சொல்லக்கூடிய ஒருவா், ஒரு மொழியைக் கொண்டு தமிழகம் மீது மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்கள் மீதும் திணிப்பது இந்திய இறையாண்மையை காப்பாற்றக்கூடிய ஒன்றாக இருக்க முடியுமா’ என கேள்வி எழுப்பினாா்.
பாஜக ஆட்சி செய்யாத அனைத்து மாநிலஅரசுகளை மிரட்ட பயன்படுத்தக்கூடிய ஒரு துறையாக அமலாக்கத் துறை உள்ளது என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மேயா் பிரியா, நபாா்டு வங்கியின் முதுநிலை பொது மேலாளா் ஆனந்த், பொது மேலாளா் ஜோதி சீனிவாசன், மகளிா் சுய உதவிக்குழு பெண்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.